ETV Bharat / state

கர்ப்பிணிக்கு நிகழ்ந்த சோகம்! முறையான சிகிச்சை அளிக்காததால் தாய், சேய் இருவரும் உயிரிழப்பு..!

author img

By

Published : Jun 20, 2023, 9:09 PM IST

காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் தாய், குழந்தை இருவரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் தாய், குழந்தை இருவரும் உயிரிழந்தனர்
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் தாய், குழந்தை இருவரும் உயிரிழந்தனர்

பிரசவத்தின் போது முறையான சிகிச்சை அளிக்காததால் பறிபோன தாய்-சேய் ஆகியோரின் உயிர்..! ஆத்திரமடைந்த உறவினர் சாலைமறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் பஞ்சுப்பேட்டை, செவிலிமேடு, பிள்ளையார் பாளையம், சின்னக் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு அரசமரத்துத் தெருவைச் சேர்ந்தவர் உதயராஜ்(26). இவர் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ராஜேஸ்வரி(21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, ராஜேஸ்வரி கர்ப்பம் அடைந்ததால் சின்ன காஞ்சிபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்து பரிசோதனை செய்து வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான ராஜேஸ்வரிக்கு கடந்த ஜூன் 18 ஆம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே, கர்ப்பிணியான ராஜேஸ்வரி தொடர் சிகிச்சைப் பெற்று வந்த சின்னக் காஞ்சிபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதால், மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், செவிலியர்களே ராஜேஸ்வரிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தின் போது குழந்தையின் தலை மட்டும் வெளியே வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தையை முழுதும் வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் எந்த முயற்சியும் பலன் அளிக்காததால், ராஜேஸ்வரியின் உறவினர்களுக்கு தெரிவிக்காமலே அவருக்கு சிசேரியன் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், ராஜேஸ்வரிக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திங்கள் கிழமை காலை 9 மணி அளவில் ஆரம்ப சுகாதார மையத்துக்கு வந்த மருத்துவர், ராஜேஸ்வரியின் நிலையைப் பார்த்துவிட்டு உடனே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் 3 கிலோ 700 கிராம் எடையுள்ள பெண் குழந்தை வயிற்றில் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. எனவே, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

முறையற்ற அறுவை சிகிச்சை மற்றும் அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றின் காரணமாக ராஜேஸ்வரியின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூன் 20) காலை ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

பச்சிளம் குழந்தை மற்றும் அதனுடைய இளம் தாய் அடுத்தடுத்து இறந்ததால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள், சின்னக் காஞ்சிபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் ராஜேஸ்வரியும், குழந்தையும் உயிரிழந்ததாக கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த இளம்பெண் மற்றும் பச்சிளம் குழந்தையின் உயிரிழப்புக்கு, உரிய நீதி வழங்க வேண்டும் எனக் கூறி விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் அருகே செங்கல்பட்டு சாலையில் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார், பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், இளம் கர்ப்பிணி பெண் மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் மாநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக் பாரில் தகராறு! ஊழியர்கள் தாக்கியதில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு பார்வை இழப்பு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.