காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் கீழ் வழிச்சாலை மார்க்கமாகச் செல்லும் பேருந்து வழக்கம்போல் நின்றுகொண்டிருந்தது.
அந்தப் பேருந்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளனர். இதைப் பார்த்த பேருந்து நடத்துநர் ஜெகன் மாணவர்களைத் தகாத சொற்களால் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு மாணவர்கள் நாங்கள் என்ன தவறு செய்தோம் எங்களை ஏன் திட்டினீர்கள் எனக் கேட்டுள்ளனர்.
பின் மாணவர்களைப் பின்னால் வரும் பேருந்தில் வருமாறு நடத்துநர் ஜெகன் கூறியுள்ளனர். அதற்கு மாணவர்கள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் மாணவர் ஒருவரின் தலையில் அடித்துள்ளார். அடிவாங்கிய மாணவர் அழுதுகொண்டே கீழே இறங்கி தனது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த மாணவனின் பெற்றோர் பேருந்து நிலையத்திற்கு வந்து நடத்துநர் ஜெகனை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்து நிலைய நேர தணிக்கையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நிலைமையின் போக்கை உணர்ந்த நடத்துநர் ஜெகன் தான் செய்த தவறுக்காக மாணவனிடமும் அவரது பெற்றோரிடமும் மன்னிப்பு கோரினார். இந்தச் சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.