ETV Bharat / state

தனியார் பேருந்து மோதி இளைஞர் பலி; பேருந்தை நொறுக்கி சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

author img

By

Published : May 18, 2023, 4:29 PM IST

காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், ஆத்திரமடைந்த உறவினர்கள் பேருந்தை நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

A youth on a two wheeler died after being hit by a private bus in Kanchipuram his relatives smashes the bus and blocked the road
A youth on a two wheeler died after being hit by a private bus in Kanchipuram his relatives smashes the bus and blocked the road

காஞ்சிபுரம்: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, சயனாபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர், தயாளன். இவரது மகன் ஜானகிராமன் (21). தந்தை தயாளனுக்கு உதவியாக ஜானகிராமனும் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். தங்கள் நிலத்தில் விளைந்த பூக்களை அறுவடை செய்து காஞ்சிபுரத்தில் உள்ள பூக்கடைச் சத்திரம் பகுதியில் விற்பனைக்கு கொடுத்துவிட்டு ஜானகிராமன் நேற்று மாலை அவரது யமஹா இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

ஜானகிராமன் அவரது வீட்டிற்கு செல்வதற்காக காஞ்சிபுரம் - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் படுநெல்லி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே திருப்பதியிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து, ஜானகிராமனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடினார். இதனை அடுத்து சம்பவ இடத்தில் திரண்ட ஜானகிராமனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடியையும், பேருந்தையும் அடித்து சேதப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

இதனை அடுத்து காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் ஜானகிராமனின் உடலுடன் அவரது உறவினர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து வழக்கமாக இந்த வழித்தடத்தில் அதிவேகமாக செல்வதாகவும், இதனால் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து நிறுவனம், ஓட்டுநர் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாமல் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப் பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை அடுத்து ஜானகிராமனின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர் ஜானகிராமனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்விற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய தனியார் பேருந்து ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆதம்பாக்கத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொண்ட நபர் வெட்டிக் கொலை; போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.