ETV Bharat / state

படிக்கச்சொல்லி வற்புறுத்தியதால் தாயைக்கொன்ற 14 வயது மகன்; சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு

author img

By

Published : Oct 14, 2022, 5:48 PM IST

படிக்கச்சொல்லி வற்புறுத்தியதால் தாயின் தலை மீது கல்லைப்போட்டு கொலை செய்த 14 வயது மகன் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

படிக்கச் சொல்லி வற்புறுத்தியதால் தாயை கொன்ற மகன்
படிக்கச் சொல்லி வற்புறுத்தியதால் தாயை கொன்ற மகன்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தைச்சேர்ந்தவர், அருள்செல்வன். சிவில் காண்ட்ராக்டரான இவருக்கு யுவராணி(36) என்ற மனைவியும், 14 வயதில் மகனும், 12 வயது மகளும் உள்ளனர். யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளியில் சரிவர படிக்காத தனது மகனை அவரது தாய் யுவராணி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் உள்ள விடுதியிலும் சேர்த்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்த தனது மகனை அவரது தாய், தந்தை கண்டித்து வந்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள்செல்வன் தனது வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டதால் வீட்டில் யுவராணி, அவரது மகன், மகள் மூன்று பேரும் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து மகன் தாய் மீது இருந்த ஆத்திரத்தில் வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஹாலோபிளாக் கல்லை எடுத்து உறங்கிக் கொண்டிருந்த தாய் யுவராணியின் தலைமீது போட்டதில், பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது அவரது மகள் சத்தம் போடவே,மகன் வீட்டை விட்டு ஓடி தலைமறைவானான். இது குறித்து அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சத்தியமங்கலம் - கோவை சாலையில் சுற்றித்திரிந்த 14 வயது மகனை நேற்று இரவு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பள்ளியில் சரிவர படிக்காத காரணத்தினால் ஏற்கெனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் உள்ள விடுதியில் தனது மகனை அவரது பெற்றோர் சேர்த்ததாகவும், விடுதியில் இருக்கப் பிடிக்காத சிறுவன், கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்தே பள்ளி செல்வதாகத் தெரிவித்துள்ளான்.

இந்நிலையில் பள்ளி தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் கூட பெறாததால் மீண்டும் விடுதியில் சேர்க்க அவரது பெற்றோர் முடிவு செய்ததால், ஆத்திரத்தில் தனது தாயின் தலையின் மீது கல்லைப்போட்டு கொலை செய்ததாக 14 வயது மகன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

இதைத்தொடர்ந்து போலீசார் அச்சிறுவனை ஈரோடு இளம் சிறார் குழுமம் முன்பு ஆஜர்படுத்தி கோவையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: டன் கணக்கில் குட்கா கடத்திய குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.