ETV Bharat / state

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு

author img

By

Published : Jan 30, 2023, 10:57 PM IST

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எஸ்டிபிஐ கட்சி (SDPI) ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், திருவண்ணாமலைக்கும் போக விரும்பவில்லை, அண்ணாமலைக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: முன்னாள் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்.27ஆம் தேதி நடைபெறும் என அறிவித்த நாள் முதல் இன்றுவரை அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளில் இறங்கியுள்ளன.

அந்த வகையில் மதச்சார்பற்ற கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்தது. இதனிடையே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் போட்டியிடப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், எஸ்டிபிஐ கட்சி (SDPI), ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திடீர் முடிவு எடுத்துள்ளது.

இது தொடர்பாக, இன்று (ஜன.30) ஈரோட்டில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் சால்வை அறிவித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என் மகன் விட்டுச்சென்ற பணியைத் தொடரவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை ஊக்குவிக்கவும் 'கை' சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பாஜக அண்ணாமலை ட்வீட் குறித்த கேள்விக்கு, திருவண்ணாமலைக்கும் போக விரும்பவில்லை; அண்ணாமலைக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை என்றார். திருமகன் ஈவெரா, நாம் தமிழர் கட்சியில் சேர விரும்பி தன்னை அணுகியதாக சீமான் அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசியதாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், சீமான் அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர் எனவும் ஒவ்வொரு நாளும் ஒரு கருத்துக்களை அவர் சொல்பவர் என்றும் கூறினார். மாற்றி மாற்றிப் பேசும் போக்கினை சீமான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

அப்போது செய்தியாளர்கள் மோடியின் பிபிசி ஆவணப்படம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, அதைக் குறித்து நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை எனவும் நாட்டு மக்களுக்கே மோடியின் கைகள் ரத்தக் கறை படிந்த கைகள் என தெரியும் என்று தெரிவித்தார்

ஒன்றிய அமைச்சராக இருந்து விட்டு எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடுவது தகுதி குறைவல்லவா என கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், கலெக்டராக இருந்தாலும் பியூனாக இருந்தாலும் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பது தான் விருப்பம். அதை போலவே ஒன்றிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே இருந்த போதிலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதைத் தரக்குறைவாகக் கருதவில்லை. மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம். கலக்டராக இருந்தாலும் பியூனாக இருந்தாலும் சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.

இதையும் படிங்க: தெலங்கானா பட்ஜெட் விவகாரம் : ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் கேசிஆர் இடையே உடன்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.