ETV Bharat / state

கீழ் பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் எதிர்ப்பு - ஜூன் 30ல் போராட்டம் நடத்த முடிவு

author img

By

Published : Jun 28, 2023, 8:28 PM IST

ஈரோடு கீழ் பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி அளித்த உறுதியை மீறி கட்டுமானப் பணியை மேற்கொண்டதால் நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜூன் 30ல் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.

farmers protest
பவானி கால்வாயில் போராட்டம்

விவசாயிகள் தொடர் போராட்டம்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் மூலமாக கீழ் பவானி, தடப்பள்ளி, அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் வழியாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இதில் பெரிய பாசனமாக 2 லட்சத்து 50ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கீழ்பவானி மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் இரு தரப்பாகப் பிரிந்து, எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276-ஐ ரத்து செய்ய வேண்டும் எனவும்; வாய்க்காலில் பழைய கட்டுமானப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாசன விவசாயிகள் பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதியில் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப்பேச்சு வார்த்தையில் விவசாயிகள் கீழ்பவானி கால்வாயில் பழுதடைந்த பழைய கட்டுமானத்தை மட்டுமே சீரமைக்க வேண்டும்; மண் கரை மண் கரையாகவே இருக்க வேண்டும்; மேலும், அரசாணை 276-ஐ ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பணிகள் துவங்கப்பட்ட இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்தைக் கேட்டு, பணிகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அமைச்சர் முத்துசாமி கூறுகையில்: ''உங்களது கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' என உறுதி அளித்தார். இதனால் விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈரோடு, காஞ்சிகோயில், கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் எந்தவிதமான உடைப்பு மற்றும் பழுதும் ஏற்படமால் மண் கரையாக உள்ள இடத்தில் அமைச்சரின் உறுதிமொழியை மீறி இரவு நேரத்தில் நீர் வளத்துறையினர் பணிகள் தொடங்கியுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இதனைக் கண்டித்து கால்வாயில் இறங்கிய அப்பகுதி பாசன விவசாய பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பெருந்துறை அருகே ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி அளித்த வாக்குறுதியை மீறி புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கிய நீர் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்டப் பகுதியில் உள்ள பாசன விவசாயிகள் ஜூன் 30ல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதையும் படிங்க:25 ஆண்டுகளாக காவிரி நீரை பார்க்காத கிராமம்: வடிகால் வாய்க்கால் தூர்வார கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.