ETV Bharat / state

Audio leak: யானையை தடுக்கக் கோரிய விவசாயியை தகாத வார்த்தைகளால் திட்டிய வனச்சரக அலுவலர்!

author img

By

Published : Jun 26, 2023, 10:19 PM IST

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுவதாகவும் அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் விவசாயி ஒருவரை வன அதிகாரி ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

யானைகளை தடுக்கக் கோரிய விவசாயியை தரக்குறைவாக பேசிய வனச்சரக அலுவலர் - வைரலாகும் ஆடியோ

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி சென்னஞ்சா. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விவசாயி சென்னஞ்சா தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஸ் உடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது வனச்சரக அலுவலர் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்க அகழி வெட்டுவதற்கு வனத்துறையிடம் நிதி இல்லாததால் நீங்கள் பணம் பத்து லட்சம் கொண்டு வாருங்கள் என பேசியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த விவசாயி செல்போனில் பேசும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான ஆடியோவை சென்னஞ்சா வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.

வன அலுவலரும் விவசாயியும் பேசிய அந்த ஆடியோவில், "மாதத்திற்கு மூன்று தடவை யானை புகுந்தால் எங்க போவது? என்றகிறார். இதைக் கேட்ட வன அலுவலர் நீ எந்த ஊருப்பா? எனக் கேள்வி கேட்கிறார். தான் தாளவாடியை சேர்ந்தவர் என்றும், 2 மாதத்துக்கு முன்னாடி புகுந்த யானை தென்னை செடியை எல்லாம் சாப்பிட்டு போனதாக கூறுகிறார். அதற்கு நீ ஆபிஸ் வாப்பா என்றதும், அதெல்லாம் ஆபீஸ் வந்து ஏற்கனவே இது தொடர்பாக எழுதி கொடுத்து இருக்கிறோம் என்றார்.

அது குறித்து கேட்டதற்கு ஆறு மாதத்திற்கு முன்னாள் எழுதிப் போட்டவர்களுக்கே வரவில்லை; உங்களுக்கு எப்படி வரும்? என்பதாக பேசினார். இதைத்தொடர்ந்து பேசிய வன அலுவலர், தம்பி, காசு நீ என்ன என்னுடைய பாக்கெட்டிலா வைச்சுருக்க? என்றும், அரசு தான் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். இதனிடையே பேசிய விவசாயி, சார் நீங்க தான் ஏதாவது பண்ணனும்.. என்றதும், வன அலுவலர் இங்கப் பாரு நீ.. ஒரு ரூ.10 லட்சம் எடுத்துட்டு வா.. நாம் யானைக் குழி தோண்டலாம் என்கிறார்.

இதைக்கேட்ட விவசாயி, சார் மக்கள் எங்க சார் பணம் வைச்சுருக்காங்க? என்றதற்கு வன அலுவலர், சொல்வதை ஒரு நிமிடம் கேளு.. அரசிடம் இருந்து உங்களுக்காக, 12 லட்சம் செலவு செய்திருப்பதாகவும், அது இன்னும் அரசிடமிருந்து வரவில்லை என்றும் அந்தப் பணத்துக்கு ரூ.30 ஆயிரம் வட்டி கட்டி வருவதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, மக்கள் எதுக்கு பணம் கட்டவேண்டும் என்றும்; மக்களுக்காக தான் நீங்க இருக்கீங்க என்றும் பேசினார். மக்களுக்காக நான் வேலை தான் செய்ய முடியும் என வன அலுவலர் பேசினார். நீங்க ரூ.12 லட்சம் எடுத்துட்டு வரச் சொன்னால் நான் எங்கிருந்து கொண்டு வருவது என்று கேள்வியெழுப்பினார். அரசிடம் கேளுங்கள் என்றதும், வன அலுவலர் அந்த விவசாயியை தகாத வார்த்தையால் திட்டுகிறார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த விவசாயி, எதுக்கு இப்படி பேசுகிறீர்கள்.. கரெக்டா பேசுங்க நீங்க.. ஒரு அதிகாரி அப்படியெல்லாம் பேசக்கூடாது என்றும், எதுக்காக இந்த வார்த்தையை பயன்படுத்தினீர்கள்' என்றும் அடுக்காக கேள்வியெழுப்பினார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

வனச்சரக அலுவலர் சதீஷ் விளக்கம்

இது குறித்து வனச்சரக அலுவலர் சதீஷிடம் கேட்டபோது, "சம்பந்தப்பட்ட விவசாயி தனது நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்காமலும், இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபடாமல் உள்ளதாகவும், யானை விவசாய தோட்டத்திற்கு நுழைந்தால் உரிய முறையில் வனப்பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அலட்சியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நபர் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தும் கும்பலை சேர்ந்த நபர் எனவும், தனது எல்லைக்குட்பட்ட மகாராஜன்புரம் வனத்துறை சோதனை சாவடியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலை அனுமதிக்காததால் என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னுடைய பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்போனில் இவ்வாறு பேசி பதிவு செய்து ஆடியோவை வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆசனூர் மாவட்ட வன அலுவலரிடம் நான் விளக்கம் அளித்துள்ளதாகவும்" அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்பனை - மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.