ETV Bharat / state

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் உயர்வு; வாகன ஓட்டிகள் சாலை மறியல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 4:02 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்குள் செல்ல நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் உயர்வைக் கண்டித்து வாகன ஓட்டிகள் சாலை மறியல்!
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் உயர்வைக் கண்டித்து வாகன ஓட்டிகள் சாலை மறியல்!

கொடைக்கானலில் சாலை மறியலில் ஈடுபட்ட வாகன ஒட்டிகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த வெள்ளிக்கிழமை முதல் நபர் ஒருவருக்கு 30 ரூபாய் எனவும், வாகனங்களின் நுழைவு கட்டணம், கேமரா கட்டணம் உள்ளிட்டவைகள் உயர்த்தப்பட்டது.

இதற்கு கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுலாத் வாகன ஓட்டிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட வன அலுவலர் யோகேஸ் குமார் மீனாவிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து அனைவரும் மாவட்ட வன அலுவலர் அறையில் இருந்து ஆவேசத்துடன் வெளியேறினர்.

பின்னர், மாவட்ட வன அலுவலர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பழைய முறை நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து கடந்த சனிக்கிழமை ஒரே முறை நுழைவுக் கட்டணமாக நபர் ஒருவருக்கு 30 ரூபாய் வீதமும் ஒரே இடத்திலும் வனத்துறையினர் வசூல் செய்தனர். இதனை அடுத்து இன்று சுற்றுலா வாகன ஓட்டிகள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் நகர்மன்ற தலைவர் மற்றும் துணை தலைவரிடம் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து நுழைவு கட்டணம் வசூல் செய்யும் இடமான மோயர் சதுக்கம் சுற்றுலாத் தல பகுதிக்கு சென்று கேட்கும் போது முறையான தகவல் இல்லாததால், சுற்றுலா வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையில் குறுக்கே நிறுத்தி மற்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்லாதவாறு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து காத்திருந்தன.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தகவல் அறிந்து வந்த உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல் வாகன ஓட்டுநர்களிடம் சமதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதில் வாகன ஓட்டுநர்கள் ஒரே முறை நுழைவு கட்டணம் ரத்து செய்து அந்த அந்த சுற்றுலாத் தலங்களில் நுழைவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும். உள்ளூர் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யக்கூடாது.

சுற்றுலாத் தலங்களில் உள்ள கடைகளுக்கு செவ்வாய்கிழமை விடுமுறை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உதவி வன அலுவலர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒரே முறை நுழைவு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அந்த அந்த சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம் வசூல் செய்ய வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து சமாதான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவே சாலையின் குறுக்கே நிறுத்திய வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

இது பற்றி மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா கூறியதாவது, "வரும் 28 ஆம் தேதியில் இருந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அந்தந்த இடங்களில் பழைய நடைமுறையில் உள்ள கட்டணங்கள் வசூல் செய்யப்படும். உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்படாது. பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல பழைய கட்டுப்பாடுகள் தொடரும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் சட்டவிரோதமாக வீடு கட்டுவதாக பிரகாஷ் ராஜ் மீது புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.