ETV Bharat / state

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: இருவர் கைது

author img

By

Published : Feb 21, 2020, 8:06 AM IST

கடலூர்: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக, ஓய்வுபெற்ற தலைமையாசிரியரிடம் ஒன்பது லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களைக் கைது செய்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

two-arrested-for-fraud-in-government-employment
two-arrested-for-fraud-in-government-employment

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதகாலமாக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக தற்போது வரை 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் தற்போது கடலூர் மாவட்டத்தில் மீண்டுமொறு மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (70). ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர், தன்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்விடம் புகார் அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, “எனது மகன் மணிவண்ணன் (37) பொறியியல் முடித்துள்ளார். இவருக்கு கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த சமரசம் (47), காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் (73) ஆகிய இருவரும் என்னிடம் ரூபாய் ஒன்பது லட்சம் பணத்தை வாங்கினர்.

அதன்பின் அவர்கள் வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டால் என்னை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இப்புகார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மோசடியில் ஈடுபட்ட சமரசம், ஹரிதாஸ் ஆகியோரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.