கடலூர் பண்ருட்டி பகுதியில் கள்ளச் சாராயம் விற்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 19ஆம் தேதி தட்டாஞ்சாவடி படைவீட்டமன் கோயில் அருகில் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் தேவி மற்றும் காவல் துறையினர், கள்ளச் சாராயம் விற்பனை செய்பவரை கண்காணித்து வந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் (49), 165 லிட்டர் சாராயத்தை கொண்டு சென்றதைக் கண்ட காவல் துறையினர் அவரை மடக்கிப்பிடித்து அவரிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
பின்பு, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர் மீது பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு, பண்ருட்டி காவல் நிலையங்களில் 10 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார்.
இதையும் படிங்க: மாமுல் வேட்டையில் ஈடுபட்ட கள்ள போலீஸ் கைது..!