ETV Bharat / state

"இதெல்லாம் ஒரு சாதனையா..? வேதனையா இருக்கு" - திமுகவை விளாசிய எஸ்.பி.வேலுமணி!

author img

By

Published : May 3, 2023, 7:03 AM IST

கோவையில் கனிமவளக் கொள்ளை நடப்பது குறித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வாரத்திற்குள் ஆட்சியரிடம் முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

’இதை’ ஒரு சாதனையாக கூறுவது வேதனையாக உள்ளது - எஸ்.பி.வேலுமணி விளாசல்
’இதை’ ஒரு சாதனையாக கூறுவது வேதனையாக உள்ளது - எஸ்.பி.வேலுமணி விளாசல்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: கோவை வடக்கு மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் சங்கனூரில் நேற்று (02.05.2023) நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, "தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் சட்டம் - ஒழுங்கு நிலவரம் பற்றி இரண்டு மணி நேரம் பேசியும், அது வெளியே வரவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிகவும் கெட்டு விட்டது என கடுமையாக விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கோவையில் நீதிமன்றத்திலேயே விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்டும், நீதிமன்றத்திற்கு வந்த பெண் மீது ஆசிட் வீச்சு நடைபெற்று, அப்பெண் இறந்து விட்டார். கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகமான கனிமவளக் கடத்தல் இருந்து வருகிறது.

தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் லோடு கனிம வளங்கள் கடத்தப்பட்டும், திமுக அரசு அதனை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. திமுகவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாகனத்திற்கும் அதிகமாக லஞ்சம் பெற்று கனிமங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை" என்றார்.

மேலும், "எடப்பாடி கொண்டு வந்த திட்டங்களையும் மெதுவாக செய்து வருகிறார்கள். கோவையை புறக்கணிக்கும் திமுக அரசை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் புறக்கணிப்பார்கள். கனிமவளக் கொள்ளை தொடர்பாக சட்டமன்றத்திலேயே அதிமுக சார்பில் கடுமையாக பேசி உள்ளோம்.

அடுத்த ஒரு வார காலத்திற்குள் இது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் லஞ்சம் நிலவுகிறது. எந்தெந்த துறைகளில் எப்படி பணம் வாங்குகிறார்கள் என ஊடகங்கள் வெளிக்கொண்டு வருவதில்லை.

12 மணி நேர வேலை சட்டத்தை போட்டதே தவறு. ஆனால், அதை திரும்பப் பெற்று, அதனை சாதனை என்று கூறி வருகிறார்கள். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் எதிர்த்த பிறகு அந்தத் திட்டத்தை வாபஸ் பெற்றதை சாதனையாக கூறுவதுதான் வேதனையாக இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: கனிமவளக்கொள்ளையைத் தடுத்த VAO - தருமபுரியில் டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.