ETV Bharat / state

இறந்தும் 4 பேர் கண்களில் வாழும் பொள்ளாச்சி இளம் மருத்துவர்!

author img

By

Published : Feb 2, 2023, 4:51 PM IST

மருத்துவராகி சிறு வயதிலேயே மரணத்தை சந்தித்த பொள்ளாச்சி மருத்துவர் பாலாஜி நாராயணன் இறந்தும் நான்கு பேருக்கு கண்பார்வை கொடுத்து தெய்வமாக நிலைத்து நிற்கிறார்.

இறந்தும் 4 பேர் கண்களில் வாழும் பொள்ளாச்சி இளம் மருத்துவர்!
இறந்தும் 4 பேர் கண்களில் வாழும் பொள்ளாச்சி இளம் மருத்துவர்!

இறந்தும் 4 பேர் கண்களில் வாழும் பொள்ளாச்சி இளம் மருத்துவர்!

கோவை அடுத்து பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வருபவர், முரளி என்கிற பழனிக்குமார். வயது (55). இவர் அதிமுக-வின் தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி பொருளாளராகவும் உள்ளார். இவருக்கு வசந்தி (46) என்ற மனைவியும்; பாலாஜி நாராயணன் (25) என்ற மகனும் மைதிலி(23) என்ற மகளும் உள்ளனர்.

இதில் பாலாஜி நாராயணன் ரஷ்யாவில் 6 ஆண்டுகள் மருத்துவப் படிப்பை படித்துவிட்டு இந்தியா வந்து 2020-ம் ஆண்டு டெல்லியில் FMGE தேர்வு எழுதி மருத்துவராக தேர்ச்சி பெற்று, கரோனா காலங்களில் திருப்பூர், ஈரோடு பகுதியில் கரோனாவில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாலாஜி நாராயணன் மருத்துவ சேவை புரிந்துள்ளார்.

அண்மையில் கோவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றினார். இந்நிலையில் டாக்டர் பாலாஜி நாராயணன் மருத்துவ மேற்படிப்பு படிக்க வீட்டிலிருந்து படிப்பதற்காக கடந்த ஒன்றரை மாதங்களாக பொள்ளாச்சி வெங்கட்ரமண வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவில் மருத்துவர் பாலாஜி நாராயணனுடன் மருத்துவப் படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த திலீப் என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது 30-வது நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மருத்துவர் பாலாஜி நாராயணன் கடந்த 26-ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து தனியார் பேருந்து மூலம் சென்னை பல்லாவரத்தில் நண்பன் திலீப்-பின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதனை முடித்துவிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது பெரியப்பா மகன் அசோக் நாராயணன் வீட்டில் பாலாஜி நாராயணன் தங்கினார்.

பின்னர், 28-ம் தேதி இரவு பொள்ளாச்சி திரும்புவதற்காக தனியார் பேருந்தில் டிக்கெட் புக் செய்திருந்தார். 28-ம் தேதி இரவு பேருந்தில் செல்வதற்காக வீட்டில் இருக்கும் லிஃப்டில் இருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் ஏறி உட்கார்ந்த போது திடீரென உடல்நிலை சரியில்லை எனக் கூறிய மருத்துவர் பாலாஜி நாராயணன், அப்படியே மயங்கி கீழே விழுந்தார்.

அதன் பின்னர், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடலை பரிசோதித்துப் பார்த்தபோது பாலாஜி நாராயணன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். பொள்ளாச்சி மருத்துவர் பாலாஜி நாராயணன் நண்பனின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்தநிலையில் இறந்து போன சம்பவம் அவரது தந்தை முரளிக்கு தெரியப்படுத்தப்பட்டது. தகவலை கேட்ட முரளியின் மனைவி மகள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை விரைந்து அவர்கள் மகன் பாலாஜி நாராயணன் உடலைப் பிரேத பரிசோதனை மேற்கொண்டு பொள்ளாச்சி கொண்டு வந்து பாலாஜி நாராயணனின் உடலை அடக்கம் செய்தனர். ஏற்கனவே பாலாஜி நாராயணன் தனது இரண்டு கண்களையும் தானம் செய்ய உறுதி அளித்து இருந்ததால் சென்னையில் உள்ள சங்கர் நேத்ராலயா மருத்துவமனைக்கு, அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

தற்போது, பாலாஜி நாராயணனின் கருவிழிகள் இரண்டு பேருக்கும், வெள்ளை கண் இரண்டு என நான்கு பேருக்கும் பொருத்தப்பட்டு நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. மருத்துவராகி சிறு வயதிலேயே மரணத்தை சந்தித்த பொள்ளாச்சி மருத்துவர் பாலாஜி நாராயணன் இறந்தும் நான்கு பேருக்கு கண்பார்வை கொடுத்து ஒளி கொடுத்து தெய்வமாக நிலைத்து நிற்கிறார்.

இதையும் படிங்க:சின்னதடாகம் ஊராட்சி தலைவர் தேர்தல் வழக்கு: மீண்டும் அதிமுக வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.