ETV Bharat / state

'காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவது இல்லை' - காவலர்கள் குற்றச்சாட்டு!

author img

By

Published : Apr 6, 2023, 4:24 PM IST

முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை மீறி தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் துறையினருக்கு வார விடுமுறை வழங்கப்படுவது இல்லை என காவலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்: தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் பணிச்சுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்படுவதால் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு கடந்த 2021ஆம் ஆண்டு, ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் காவலர்களின் பிறந்தநாள், திருமண நாளன்று குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும்; வார விடுமுறை தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கும் காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதியன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், 'காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்' என்று அறிவித்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க உத்தரவிட்டு, அதற்கான அரசாணையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021 நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்டார். காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் துறையில் ஓய்வில்லாமல் சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்கள் புத்துணர்ச்சியோடும், பணியாற்ற வழிவகுக்கும் என காவலர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆரம்பத்தில் மட்டுமே அனைத்து காவலர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு வந்த நிலையில் அது படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பட்டாலியன் போலீசாருக்கு விடுமுறை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் (பட்டாலியன்) பணியாற்றும் காவல் துறையினர் கூறுகையில், ''காவலர்களின் நிலையை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கும், காவல் துறைத் தலைவரும் இந்த வார விடுமுறையை அறிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் சில மாதங்கள் மட்டுமே வார விடுமுறை தந்தனர். ஆனால், தற்போது விடுமுறை என்பது எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. முக்கிய விருந்தினர்கள் மற்றும் சிறப்புப் பணிக்காக செல்லும் காவலர்களைத் தவிர மற்றவர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை தந்து வந்தனர். ஆனால் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பணிச்சுமை காரணமாக காவலர்கள் மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து பணியாற்றுவதன் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகும் சூழல் உள்ளதால் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த அரசாணையைப் பின்பற்றி காவல் துறை அதிகாரிகள் ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றும் எங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பழங்குடியின இளைஞர் மது கொலை வழக்கு - 13 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.