ETV Bharat / state

“விண்வெளித்துறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சமம்” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 1:53 PM IST

Nirmala Sitharaman in Coimbatore: கோயம்புத்தூரில் நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூய்மைப் பணியாளார்களுடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

கோவையில் தூய்மை பணிகளை மேற்கொண்ட நிர்மலா சீதாராமன்
கோவையில் தூய்மை பணிகளை மேற்கொண்ட நிர்மலா சீதாராமன்

கோயம்புத்தூர்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (அக் 3) கோயம்புத்தூரில் நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். தூய்மை பிரச்சார திட்டம், கடனுதவி வழங்கும் விழா, கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்குச் சென்ற அவர், அப்பள்ளி மாணவ மாணவியருடன் விஞ்ஞானம் குறித்து உரையாடினார். நிகழ்வின்போது மாணவர்களுடன் பேசிய அவர், “சந்திரயான் வெற்றி நமக்கு மிகவும் பெருமை அளிக்கும் ஒன்று. தமிழகத்தைச் சேர்ந்த பலரும் சந்திரயான் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் சந்திரயான் வெற்றியை ஊக்கமாகக் கொண்டு, வரும் காலங்களில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலம் ஆகும். நமது விஞ்ஞானிகள் சந்திரயான்-3 வெற்றிக்கு மாபெரும் பங்களிப்பு அளித்துள்ளனர். அதேபோல், பள்ளி மாணவர்களான உங்கள் பங்களிப்பு நாட்டின் விண்வெளித் துறைக்கும் இருக்க வேண்டும். தற்போது விண்வெளித் துறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சமம்” என கூறினார்.

இதையும் படிங்க: ஸ்ரீ தேவியின் மரணம் எதிர்பாராத விதமாக நடந்த விபத்து - மனம் திறந்த போனி கபூர்!

மேலும், சந்திரயான் மினியேச்சர் மாதிரியை பள்ளி மாணவர்களுக்கு காண்பித்து, அதனை அன்பளிப்பாக அளித்தார். பின்னர் அப்பள்ளியின் முன்னாள் மாணவி சந்திர பிரபா தற்பொழுது இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் நிலையில், அவர் வடிவமைத்த சாட்டிலைட் மாடல் ஒன்றை பள்ளி நிர்வாகத்தினர் மத்திய நிதி அமைச்சருக்கு காண்பித்தனர்.

மேலும், அப்பள்ளியைச் சேர்ந்த ஹரிஸ் என்ற மாணவர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்ததை தொடர்ந்து, அம்மாணவருக்கு மெடல் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இஸ்ரோவில் இருக்கும் தமிழ் விஞ்ஞானிகளைப் போல வரவேண்டும் என மாணவர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக பீளமேடு 27வது வார்டு பகுதியில் தூய்மை பாரத திட்டத்தை முன்னிட்டு வங்கி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அண்ணாமலை இல்லாமல் நடைபெறும் பாஜக மாநில ஆலோசனைக் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.