ETV Bharat / state

தீபாவளி டாஸ்மாக் விற்பனைக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது வெட்கக்கேடு - அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Oct 21, 2022, 10:39 PM IST

தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்திருப்பது வெட்கக்கேடு. தீபாவளிக்கு முந்தைய நாள், அடுத்த நாள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தீபாவளி டாஸ்மாக் விற்பனைக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது வெட்கக்கேடு
தீபாவளி டாஸ்மாக் விற்பனைக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது வெட்கக்கேடு

கோவை: தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்திருப்பது வெட்கக்கேடு. தீபாவளிக்கு முந்தைய நாள், அடுத்த நாள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.கணபதி புதூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை

அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களை அவர், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறேன். பல்லடத்தில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன்.

விசைத்தறிகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பதால் பல்லடத்தில் மட்டும் 60 ஆயிரம் விசைத்தறிகள் மூடப்படும் நிலையில் உள்ளது. தமிழக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக விசைத்தறிகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். பண்டிகை காலமான தற்போது ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றனர்.

இதனைத் தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். மின் கட்டண பிரச்சனைக்குத் தீர்வாக மாதாந்திர மின்கட்டணம் கணக்கிட வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில் மாதம் தோறும் மின்கணக்கீடு என்றனர். ஆனால் அதை அமல்படுத்தவில்லை எனக் கூறினார். மேலும் அத்திகடவு - அவினாசி திட்டம் கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது என தெரிவித்த அவர், கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் நடக்கவில்லை எனவும், இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்த மக்களின் நீண்ட கால கோரிக்கையான பாண்டியாறு புன்னம்புழா, ஆனைமலை நல்லாறு திட்டம் ஆகியவற்றை கேரள அரசிடம் பேசி திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கூறினார். நீர் பாசனத் திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

விவசாயத்தில் லாபம் இல்லாததால் விவசாய நிலங்களை மனைகளாக விற்கும் நிலை இருக்கிறது எனவும் கூறினார். கூடுதல் அணைகளைக் கட்டுவதுடன், பவானி அணையின் கொள்ளவை அதிகப்படுத்த வேண்டும் எனவும், சென்னையில் புதிதாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும் என்றார்.

கோவை மண்டலம் மிகப்பெரிய சொத்து. இதை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் எனவும், பஞ்சுக்கும் ஜி.எஸ்.டி, நூலுக்கும் ஜி.எஸ்.டி, தயாரிக்கப்பட்ட துணிக்கும் ஜி.எஸ்.டி என விதிக்கப்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் என்பது மாநில உரிமைக்கு எதிரானது என கூறிய அவர் இன்றைய சூழலில் இது பொருந்தாது எனவும் தெரிவித்தார்.
22 அலுவல் மொழிகளில் ஒன்று இந்தி எனக் கூறிய அவர் ஏன் இந்தியைத் திணிக்க வேண்டும், இந்தி அவசியம் என்றால் கற்றுக்கொள்வார்கள் திணிக்கக் கூடாது எனத் தெரிவித்தார். மத்திய அரசு பல வகைகளில் இந்தி திணிப்பைச் செய்ய முயல்வதாகக் கூறிய அவர் இந்தியைத் திணிக்கும் முயற்சியை கை விடுங்கள் என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை காவல்துறைக்கு ஒரு படிப்பு எனக் கூறிய அவர், யாருக்கும் யாருடைய உயிரையும் பறிப்பதற்கு உரிமை இல்லை எனவும், இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சரியான அணுகுமுறையை காவல்துறை கடைப்பிடிக்கவில்லை என தெரிவித்தார்.

1987இல் ஓரே நாளில் பா.ம.கவை சேர்ந்த 21 பேரைச் சுட்டு கொன்றார்கள். அன்று யாரும் கேட்கவில்லை. அன்று கேட்டு இருந்தால் தூத்துக்குடியில் இது போன்ற சம்பவம் இப்போது நடந்து இருக்காது எனத் தெரிவித்தார். காவிரியில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 530 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து கொண்டு இருக்கின்றது எனவும், இரு கட்சிகளும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நீர் மேலாண்மைக்கு என ஒரு லட்சம் கோடி தனியாக ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும், நிலுவையில் உள்ள திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பின்னலாடை தொழில் அதிகம் உள்ள இந்த பகுதியில் நூல்விலை உயர்வால் ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்பட்டுள்ளது இதற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். இந்தியாவிற்கு அதிக அளவில் அந்நிய செலாவணி கொங்கு மண்டலத்திலிருந்து கிடைக்கின்றது எனவும், இந்த பகுதிக்கு மத்திய அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனவும், மாநில அரசு கடிதம் எழுதுவதோடு இல்லாமல் அதை வலியுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.

போதைப் பொருள் இளைய சமூகத்தைச் சீரழிக்கிறது எனத் தெரிவித்த அவர், தனக்கு வரும் புகார்களில் அதிகம் இது தொடர்பாகத்தான் உள்ளது என்றார். கஞ்சா எண்ணெய், கஞ்சா சாக்லேட், கஞ்சா ஸ்டாம்ப் என அதிகரித்து வருகிறது, இதற்கு முதல்வர் தனிக் கவனம்
செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். போதை ஒழிப்புத்துறைக்குக் கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும். இதை முக்கிய பிரச்சனையாக முதல்வர் பார்க்க வேண்டும் என்றார்.

நீலகிரி தேயிலைக்குக் குறைந்த விலையே வழங்கப்படுவதாகக் கூறிய அவர், பசுந்தேயிலைக்குக் கூடுதல் கூலி பெற்றுத்தரத் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தீபாவளிக்கு டாஸ்மாக் இலக்கை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதை ஏற்க முடியாது இலக்கு நிர்ணயம் செய்திருப்பது வெட்கக் கேடு. தீபாவளிக்கு முந்தைய நாள், அடுத்த நாள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனத் தெரிவித்தார்.

தீபாவளி டாஸ்மாக் விற்பனைக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது வெட்கக்கேடு

இதையும் படிங்க: கோவை குசும்புடன் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவலர் அறிவுரை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.