ETV Bharat / state

தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம் - அக்டோபரில் வகுப்புகள் தொடக்கம்!

author img

By

Published : Jul 10, 2023, 4:14 PM IST

சென்னை ஐஐடி தான்சானியாவின் சான்சிபாரில் தனது சர்வதேச வளாகத்தைத் தொடங்குகிறது. இந்த வளாகத்தில் முதற்கட்டமாக தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இளங்கலை, முதுகலைப் படிப்புகள் தொடங்கப்படவுள்ளதாகவும், வரும் அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும் என்றும் சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

IIT Chennai
சென்னை

சென்னை: சென்னை ஐஐடியின் சான்சிபார் வளாகம் (www.iitm.ac.in/zanzibar), கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் சான்சிபார் தீவில் அமைய உள்ளது. இதன் மூலம் சர்வதேச வளாகம் ஒன்றைத் தொடங்கும் நாட்டின் முதல் ஐஐடி என்ற பெருமையையும் சென்னை ஐஐடி பெற்றுள்ளது. இந்த வளாகம் அமையவிருப்பதை ஒட்டி, இறுதிகட்ட நடைமுறையாக இந்தியா- தான்சானியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ஐஐடியில் ஜூலை 2023-ல் தொடங்கவுள்ள பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் தான்சானியா, சான்சிபாரைச் சேர்ந்த குடிமக்களுக்கு இந்திய அரசு ஏராளமான உதவித் தொகைகளை வழங்குகிறது.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, "சான்சிபாரில் வளாகத்தை நிறுவியிருப்பது உண்மையிலேயே சென்னை ஐஐடியின் வரலாற்றில் மிகப்பெரிய மைல் கல்லாகும். இதன் மூலம், சான்சிபாரில் வருங்காலத்தில் உயர் கல்விக்கான முன்முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.

முதல் கல்வியாண்டான 2023-24ஆம் ஆண்டின் வகுப்புகள் அக்டோபரில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் நான்காண்டு இளங்கலை அறிவியல், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இரண்டாண்டு முதுகலைத் தொழில்நுட்பம் ஆகிய இரு முழுநேர கல்வித் திட்டங்கள் இடம்பெறுகின்றன. இதில் 70 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்தப் படிப்பிற்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அர்த்தமுள்ள மற்றும் ஒருங்கிணைந்த கூட்டுப் பட்டப்படிப்புகளை ஏற்படுத்துவது, ஆசிரியர், மாணவர் இயக்கத்தை மேம்படுத்துவது போன்ற விரிவான செயல்திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். வெளிநாட்டில் முழு அளவிலான இயற்பியல் வளாகம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகிறோம். இந்த லட்சியங்கள் நனவாவதைக் காணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

புதிய கல்விக்கொள்கை 2020, இந்திய உயர்கல்வியை நாட்டிற்கு வெளியேயும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கிறது. தான்சானிய அரசின் கல்வி அமைச்சகம் இது தொடர்பாக தமது விருப்பத்தையும் பேரார்வத்தையும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தது. இரு தரப்பிலும் பல்வேறு பிரதிநிதிகள் குழுக்கள் பார்வையிட்ட பின், இதில் கூட்டுமுயற்சி சிறந்ததாகக் கண்டறியப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சென்னை ஐஐடி தனது முதலாவது சர்வதேச வளாகத்தை சான்சிபார்- தான்சானியாவில் தொடங்கத் தயார் நிலையில் உள்ளது. கற்பித்தல் நிபுணத்துவத்துவம், சென்னை ஐஐடியின் தர உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்குமே தவிர, மாணவர்களின் ஆசிரியர்- மாணவர் விகிதம் கணக்கில் கொள்ளப்படாது.

பள்ளிகளில் நடத்தப்படும் பட்டப்படிப்பு போன்ற அமைப்புமுறையை சான்சிபார் வளாகத்தில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் திட்டமிடப்பட்டுள்ள இரு பட்டங்களையும் தற்போது அமையவிருக்கும் அறிவியல் மற்றும் ஐஐடி சென்னை பள்ளி வழங்கும். இந்தியாவிலும்; சான்சிபார், தான்சானியாவிலும் உள்ள நிபுணர்களின் உள்ளீடுகளுடன் கல்வித் திட்டங்களுக்கான விரிவான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

நுழைவுக்கான நடைமுறை: சென்னை ஐஐடியின் ஆசிரிய வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வு, நேர்காணல் என செனட்டால் அனுமதிக்கப்பட்ட சர்வதேச மாணவர்கள் சேர்க்கை நடைமுறைகள் பின்பற்றப்படும். பல்துறைக் கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆகியவற்றில் ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்களின் பரந்த நிபுணத்துவத்தை நிலைநாட்டும் விதமாகவும், மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான விரைந்த செயல்திட்டத்தையும் கொண்டதாக இந்த வளாகம் அமைந்திருக்கும். சர்வதேச வளாகங்களில் மிகச் சிறந்த ஒன்றாக ஐஐடி மெட்ராஸ் சான்சிபார் வளாகத்தை உள்நாட்டு அரசாங்கத்தின் வலுவான ஆதரவுடன் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி, உணவக வசதி போன்றவை அமைக்கப்படும். தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ஈடுசெய்யும் வகையில் பல்வேறு தரப்பினருடன் இணைந்து உதவித்தொகை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்நாட்டின் அமைச்சக அதிகாரிகள் மற்றும் சான்சிபார்/தான்சானியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் மூலம் அந்நாட்டிற்கான தரவு அறிவியலின் முக்கியத்துவம் தெரிய வந்துள்ளது. சென்னை ஐஐடியில் தற்போது உள்ள பிரபலமான பாடத்திட்டங்கள், அவற்றின் எதிர்கால வேலைவாய்ப்பு, உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் ஆகியோரின் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டுதான் திட்டமிடப்பட்டுள்ளன.

அலுவலகங்களை அமைப்பதற்கான வசதிகள், வகுப்பறைகள், கலையரங்கம், மாணவர்களுக்கான தங்கும் விடுதி ஆகியவற்றுடன் தற்காலிக வளாகம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சான்சிபாரில் உள்ள பிவேலியோ மாவட்டத்தில் உள்ள இந்த வளாகத்தில் உணவக வசதிகள், மருந்தகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சான்சிபார் தீவில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஐஐடி சான்சிபார் நிரந்தரமாக அமைக்கப்படும்" எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: IIT Madras campus: தான்சானியாவில் சென்னை ஐஐடி கிளை - கையெழுத்தானது ஒப்பந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.