ETV Bharat / state

"10 ஆண்டுகளானாலும், திமுகவால் நீட்டை ரத்து செய்ய முடியாது" - எடப்பாடி பழனிசாமி!

author img

By

Published : Aug 17, 2023, 7:57 AM IST

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக தெரிவித்த மு.க ஸ்டாலின், 2 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் இவ்வளவு நாட்கள் என்ன செய்தார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், 10 ஆண்டுகளானாலும் முதலமைச்சரால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றார்.

kovai
கோவை

சென்னை இருந்து சேலம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "மதுரையில் வரும் 20ஆம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வியக்கும் வகையில் இந்த மாநாடு சிறப்பாக அமையும். 15 லட்சம் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், மாநாட்டில் பங்கேற்பார்கள்.

இந்த மாநாட்டைக் கண்டு பயந்து நடுங்கிப் போய், என்ன செய்வது என்று தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கின்றார். இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். இப்பொழுது இரண்டு ஆண்டுகள் உருண்டோடி 3வது ஆண்டு நடக்கிறது, இந்த 3 ஆண்டு காலத்தில் என்ன முயற்சி எடுத்தார்கள்.

ஆனால் அதிமுக நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் எடுத்தது. அதிமுக எடுத்த அதே முயற்சிகளை தான் திமுகவும் எடுத்து வருகின்றது. நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவிற்கு கூட எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை. இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்தாவது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய, ஆதரவை கேட்டு இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருக்க வேண்டும், அதையும் திமுக செய்யவில்லை.

இதையும் படிங்க: ரூ.4,620 கோடி முதலீடு மோசடி வழக்கு; ஹிஜாவு நிதி நிறுவன இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதற்காக பெங்களூர் சென்ற முதலமைச்சர், தமிழகத்தை பற்றியும், விவசாயத்தை பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார். மாநிலத்தின் பிரச்சினை என்று வந்த பொழுது எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் தான் கூட்டணியில் அங்கம் வகிப்பேன் என்று கெஜ்ரிவால் சொன்னார். அவர் வேண்டியதை கேட்டு பெறுகிறார். சரியான முறையில் செயல்பட்டார். அவரை போல் திமுக செயல்படவில்லை.

காவிரி தீர்ப்புப்படி தண்ணீரை முழுமையாக திறந்து விட்டால் தான் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று சொல்லி இருக்க வேண்டும். அதை ஸ்டாலின் செய்யவில்லை. அவரை, கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் வந்து வரவேற்ற போது ஐந்து நிமிடம் அவரிடம் பேசி இருக்கலாம். மக்களைப் பற்றி கவலைப்படாமல், ஆட்சி அதிகாரம் மட்டுமே ஸ்டாலினுக்கு முக்கியமாக இருக்கின்றது.

மதுரை மாநாடுக்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கனவே காவல்துறை அனுமதி வாங்கி இருக்கிறோம். மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் தேவையான பாதுகாப்பு கேட்டு பெற்று இருக்கிறோம். மாநாட்டுக்கு தேவையான பாதுகாப்பு, வாகனங்கள் தடை இல்லாமல் வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு கொடுத்து இருக்கிறது.

2010 டிசம்பரில் நீட் தொடர்பான உத்தரவு போடப்படுகின்றது. நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதும் திமுக தான். அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதும் திமுக தான். ஆனால் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலில் தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக.

அதிமுக என்ன செய்ததோ அதைத்தான் திமுக செய்கின்றது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி, சட்ட நுணுக்கத்தின் மூலமாக உச்ச நீதிமன்றத்தை நாடி அதற்கு தீர்வு காண வேண்டும். திமுக அரசு அதை செய்யாமல் சாக்குப் போக்கு சொல்லி மக்களை ஏமாற்றுகிறது.

உங்களுக்கு அதிகாரம் இருக்கின்றதே, அதை வைத்து செய்ய வேண்டும். எந்த அதிகாரத்தையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். மக்களை ஏமாற்றி ஆட்சியில் தொடரவே விரும்புகின்றனர். 10 ஆண்டுகள் ஆனாலும் நீட் தேர்வை இவர்களால் ரத்து செய்ய முடியாது.

அதிமுக உள் இடஒதுக்கீடு கொண்டு வந்ததால் இந்த ஆண்டு 606 பேர் தேர்வாகி இருக்கின்றனர். திமுகவின் 27 மாத கால ஆட்சியில் 2 லட்சத்து 73 ஆயிரம் கோடி கடன் வாங்கியது தான் மிச்சம். கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை தேர் வலம் வரக்கூடிய பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைக்க தடை கோரி மனுத்தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.