ETV Bharat / state

ஹோட்டலை அபகரித்துக் கொண்டதாக அண்ணாமலை மீது பாஜக நிர்வாகி புகார்!

author img

By

Published : May 25, 2023, 4:18 PM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில் சிலர் தனது உணவகத்தை அபகரித்துக் கொண்டதாக, பாஜக நிர்வாகி ஒருவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

annamalai
அண்ணாமலை மீது புகார்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்

கோவை: கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (47). இவர் பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார். "பழைய சோறு டாட் காம்" என்ற பெயரில், மாநிலம் முழுவதும் உணவகங்களுக்கு உணவு விநியோகம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்ணாதுரை புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், "சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவரின் கட்டடத்தில் வாடகை அடிப்படையில் எனது உணவகத்துக்கான கட்டடத்தை வாங்கினேன். எழுத்துப் பூர்வமாக வாடகை ஒப்பந்தமும் செய்து கொண்டோம்.‌ கட்டடத்தை சீரமைக்க நான் 4 லட்ச ரூபாய் செலவு செய்து இருக்கிறேன். இதற்கிடையே பழனிச்சாமியின் மகள் பிருந்தா வாடகை கட்டடத்தில் இயங்கும் எனது உணவகம் மற்றும் அலுவலகத்திற்கு வந்து அடிக்கடி இடையூறு செய்தார். வாடகை கட்டடத்துக்கு அதன் உரிமையாளர் தொடர்ந்து வந்தால் எப்படி வியாபாரம் செய்ய முடியும்?

அதுமட்டுமின்றி உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களை தடுப்பது, மின் இணைப்பை துண்டித்தல் போன்ற இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர். கட்டட உரிமையாளரால் எனக்கு 15 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஆகிவிட்டது. எங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை, கட்டட உரிமையாளர் பழனிசாமி சந்தித்துள்ளார்.

பின்னர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில் மாவட்ட பாஜக தலைவர் உத்தமராமசாமி, மாவட்ட பொது செயலாளர் செந்தில் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்டவர்கள் எனது உணவகத்துக்கு வந்தனர். பூட்டை உடைத்து சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எடுத்து சென்று விட்டார்கள். இது தொடர்பாக நான் கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்தார்கள்.‌ எனது உணவகத்தில் இருந்த பொருட்கள் எங்கே சென்றது என தெரியவில்லை. நான் நடத்தி வந்த உணவகத்தை, பாரதிய ஜனதா சேவா மையமாக மாற்ற திட்டமிட்டு இது போன்ற செயல்களை செய்திருப்பதாக தெரிகிறது‌ .

'உனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை. ஏதாவது இருந்தாலும் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பேசிக் கொள்' என என்னை மிரட்டி வருகிறார்கள். அண்ணாமலை, உத்தம ராமசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சேவை மற்றும் மக்களை அணுகும் திட்டங்களை அவர்கள் செய்தது போல் காட்டிக்கொள்ள அண்ணாமலை தரப்பினர் இது போன்ற அடாவடி செயலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. நான் வெளிப்படையாக புகார் அளித்திருப்பதால் அவர்கள் என் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுப்பார்கள். போலீசார் உரிய முறையில் இதனை விசாரிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: சிதம்பரம் குழந்தைகளிடம் இருவிரல் சோதனை நடக்கவில்லை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.