ETV Bharat / state

கோவை மருதமலையில் யானை தாக்கி ஒருவர் பலி.. வனத்துறை எச்சரிக்கை என்ன?

author img

By

Published : Jun 20, 2023, 11:02 PM IST

கோவை அருகே குடும்பத்துடன் விறகு சேகரிக்க வனப்பகுதிக்கு சென்ற வாலிபர் யானை தாக்கி பலியானதை தொடர்ந்து அவரது 3 வயது மகன் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

விறகு சேகரிக்க வனப்பகுதிக்கு சென்ற வாலிபர் யானை தாக்கி உயிரிழந்தார்
விறகு சேகரிக்க வனப்பகுதிக்கு சென்ற வாலிபர் யானை தாக்கி உயிரிழந்தார்

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 32). இவர் தனது மனைவி கல்பனா (வயது 27) மற்றும் 3 வயது மகன் அனீஷ் ஆகியோருடன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மருதமலை ஜ ஓ பி காலனி கணபதி நகரில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார்.

இவர் இன்று (ஜூன் 20) மாலை 5 மணியளவில் மருதமலை அருகேயுள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க மனைவி மற்றும் மகனுடன் சென்றுள்ளார். விறகு சேகரித்துவிட்டு மூன்று பேரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது கல்பனா விறகுடன் முன்னால் சென்றுள்ளார். கல்பனாவைத் தொடர்ந்து பின்னால் குமார் மகனைத் தூக்கிக் கொண்டு வந்துள்ளார்.

அப்போது திடீரென வனப்பகுதியிலிருந்த வந்த ஒற்றை ஆண் யானை குமாரைப் பின்புறமாக வந்து தாக்கியது. யானை தாக்கியதில் சிறுவன் தூக்கி எறியப்பட்ட நிலையில், குமாரை யானை மிதித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. கண்முன்னால் கணவனை யானை மிதித்துக் கொன்றதைக் கண்டு அலறிய கல்பனா, காயமடைந்து கீழே கிடந்த மகனைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்துள்ளார்.

கல்பனாவை அலறிய நிலையில் கண்ட அக்கம்பக்கத்தினர், சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியதுடன் குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோவை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “மருதமலை வனப்பகுதியில் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம்.மேலும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தால் அவர்களாகவே விரட்ட முயற்சிகள் மேற்கொள்ளக்கூடாது, வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தால் அவர்கள் வந்து யானையைக் காட்டுப்பகுதிக்குள் விரட்டுவார்கள். விறகு சேகரிக்க வனப்பகுதி ஒட்டி உள்ள இடங்களுக்கும் செல்லக்கூடாது” எனவும் தெரிவித்தனர்.

மேலும் தடாகம், மருதமலை, கெம்பனூர், வனப்பகுதிக்குள் யானைகள் மாறி மாறி இடம் பெயர்ந்து வருவதால், காலை மாலை இரவு நேரங்களில், யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மலை பாதையில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் படிக்கட்டு வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் பாரில் தகராறு! ஊழியர்கள் தாக்கியதில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு பார்வை இழப்பு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.