ETV Bharat / state

அன்னிய செலாவணி மோசடி வழக்கு; டிடிவி தினகரனிடம் அபராதத்தை வசூலிக்காதது குறித்து நீதிமன்றம் கேள்வி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 10:50 PM IST

MHC question to Enforcement Directorate: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிக்காமல் இத்தனை ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Why not collecting penalty amount from Ttv dhinakaran MHC question to Enforcement Directorate
Why not collecting penalty amount from Ttv dhinakaran MHC question to Enforcement Directorate

சென்னை: கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்று, இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாக அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் எம்பி, டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையினர், அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா (FOREIGN EXCHANGE REGULATION ACT) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தாததால், டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005ல் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் இன்று (செப்டம்பர் 04) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ஃபெரா சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த பிறகும், அபராதத்தை செலுத்தாததால் தினகரனை திவாலானவர் என சட்ட ரீதியாக அறிவிக்கும் வகையில் நோட்டீஸ் பிறப்பித்ததில் எந்த தவறும் இல்லை, இது உரிமையியல் பிரச்னை கிடையாது, என்றார்.

ஆனால் டிடிவி தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், தினகரனுக்கு உள்ள நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீசை பிறப்பித்துள்ளனர். இது சட்டரீதியாக தவறு என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 100 சதுர அடி நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து விட்டால் அரசு அதிகாரிகள் புடைசூழ, புல்டோசருடன் ஆக்கிரமிப்பை அகற்ற செல்கின்றனர். ஆனால் இத்தனை ஆண்டுகளாக 28 கோடி ரூபாய் அபராதத்தைச் செலுத்தாமல் உள்ளார். அதை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், முன்னாள் எம்பி என்பதற்காக அபராதத்தை செலுத்த முடியாது என கூற முடியுமா? என டிடிவி தினகரன் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டம் அனைவருக்கும் பொதுவானது தான். நாட்டின் குடியரசுத் தலைவரானாலும், பிரதமரானாலும் தவறு செய்தால் சட்ட ரீதியாக எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். அமலாக்கத்துறை விதித்துள்ள அபராதத்தை செலுத்தியிருந்தால் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு இருக்காது என்றனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளை (செப்டம்பர் 5) தள்ளிவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பறிபோகிறதா செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி? கட்டம் கட்டும் திமுக தலைமை; திண்டிவனத்தில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.