ETV Bharat / state

“காலை முதல் காத்திருந்தேன்.. ஆசிரியர்கள் யாரும் வரவில்லை” - அமைச்சர் அன்பில் மகேஷ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 12:17 PM IST

Updated : Oct 12, 2023, 1:39 PM IST

Minister Anbil Mahesh Poyyamozhi: போராட்டம் அறிவித்துள்ள ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமாெழி தெரிவித்துள்ளார்.

போராட்டம் அறிவித்துள்ள ஆசிரியர்கள்
போராட்டம் அறிவித்துள்ள ஆசிரியர்கள்

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞரின் பாதையில் ஒரு பயணம் என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், செம்மொழிப் பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், கண்ணகி சிலை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் ஆகியவற்றை பார்வையிட உள்ளனர்.

இவர்களுக்கான வாகன பயணத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமாெழி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் என்கிற பெயரில் அவரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சிறப்பான திட்டத்தை, பள்ளி மாணவர்களை தேர்வு செய்து வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் காண்பித்து முக்கியத்துவத்தை கூறவுள்ளோம்.

"கலைஞர் வழித்தடத்தில் ஒரு பயணம்" எனும் மாணவர்களுக்கான ஒருநாள் கல்விச் சுற்றுலாவை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

கடந்த அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் NEET, JEE ஆகிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதில் ரூ.4.27 கோடி செலவினத்தை தவிர்த்திருக்கலாம். 385 பயிற்சி மையங்களுக்கு தலா 55,000 ரூபாய் செலவில் வாங்கப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள் 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.3.18 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு வழங்கிய வழிகாட்டி புத்தகமும் பயன்படுத்தாததால் ரூ.2.15 கோடி செலவில் வழிகாட்டி புத்தகங்கள் மறுகொள்முதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல வீண் செலவு செய்துள்ளதாக நாங்கள் சொல்லவில்லை, சி.ஏ.ஜி சொல்லியுள்ளது.

போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்தேன். காலை 8.30 மணியிலிருந்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்காக காத்திருந்தேன். ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஆசிரியர் சங்கங்களுக்குள் முரண்பாடுகள் உள்ளது.

அதை அவர்களே பேசி சரி செய்து கொண்டு வர வேண்டும். பேச்சுவார்த்தைக்காக எப்போதும் கடிதம் மூலம் அழைப்பு விடுப்பதில்லை. தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தோம். இன்று நாள் முழுவதும் எனது முகாம் அலுவலகக் கதவுகள் திறந்திருக்கும். ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து, அவர்களது கருத்துகளைக் கூறலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திட்டமிட்டபடி நாளை போராட்டம்... அமைச்சரைச் சந்திக்க வேண்டியதில்லை" - டிட்டோ ஜாக் அறிவிப்பு

Last Updated :Oct 12, 2023, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.