ETV Bharat / state

"அரசியல் போராட்டம் நடத்தி தமிழீழ உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்" - பிரபாகரன் மகள் துவாரகா என பெண் வீடியோ வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 8:43 PM IST

Viduthalai Pulikal Prabhakaran Daughter Dwaraka Speech: உலகளவில் தமிழர்கள் சார்பில் இன்று (நவ. 27) மாவீரர் நாள் கொண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழீழ தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா பிரபாகரன் என்று கூறி பெண் ஒருவர் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

viduthalai-pulikal-prabhakaran-daughter-dwaraka-speech-video
அரசியல் போராட்டம் நடத்தி தமிழீழ உரிமைகளை வென்று எடுக்க வேண்டும் - பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியீடு!

ஹைதராபாத்: உலகளவில் தமிழர்கள் சார்பில் இன்று (நவ. 27) மாவீரர் நாள் கொண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழீழ தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா பிரபாகரன் என்று கூறி இன்று சரியாக 05.54 மணிக்கு சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவர் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ பதிவில், "துவாரகா பிரபாகரன் என்ற பெயரில் பேசும் பெண் ஒருவர் கூறும் போது, "தமிழீழ போராட்டத்தில் உயரிழிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாள், எத்தனையோ துரோகங்கள், வீழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களை கடந்து தற்போது உங்கள் முன்பு உரையாற்றுவதாகவும், உலகத்தில் தனித்து நின்று தமிழீழ விடுதலைக்காக போராடினோம். தற்போது தமிழீழ தாயகத்தை சிங்கள அரசு முழுவதுமாக மாற்றிமைத்துள்ளது. தமிழீழ மக்களுடன் இணைந்து பணி செய்ய காலம் வாய்ப்பு அளிக்கும் என நம்புவதாக வீடியோவில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், தனித்து நின்று போர் புரிய தைரியம் இல்லாத சிங்கள அரசு பலம் வாய்ந்த நாடுகளை தன் பக்கம் வலைத்தது. சிங்கள அரசு தோல்வி அடையும் நேரத்தில் சக்தி வாய்ந்த நாடுகளிடம் யாசகம் பெற்றது. சிங்கள அரசிற்கான வழி தடங்கள் மூடப்பட்டன. இதனால் முள்ளி வாய்காலில் மவுனித்து போவதற்கு இதுவே காரணமாகும். ஆனாலும் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம் முற்று பெறவில்லை.

தற்போது, நமது பண்பாட்டு சீர்கேடுகளை ஊக்குவித்து கல்வி, வேலை வாய்ப்பில் பாகுபாடு மேற்கொண்டு சிங்கள பவுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து சுதந்திரங்களும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட தேசமாக தமிழீழ தேசம் திகழ்க்கிறது. அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட மக்களாக எமது மக்கள் தமிழீழ பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

தனியாக சட்டம் வகுக்கப்பட்டு சுதந்திரமாக வாழ முடியும் என ஆசை வார்த்தை கூறிய உலகில் சக்தி வாய்ந்த நாடுகளும் தற்போது வரை தமிழீழ மக்களுக்கு எந்த தீர்வையும் வழங்கவில்லை. ஈழத்தில் தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்டது போர் குற்றம் எனவும் மனித உரிமை மீறல் என கூறிய ஐ.நா அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றியது, ஆனால் அதற்கான தீர்வுகளை எந்த நாடுகளும் வழங்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

தமிழீழ மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள், ஆயுத போராட்டம் முடிந்தாலும் அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கு பல்வேறு நாடுகளில் இருக்கும் என் இன மக்கள் மற்றும் தமிழீழத்தில் உள்ள மக்கள் தான் காரணம். சுதந்திரத்திற்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புலிகள் வேறு - மக்கள் வேறு என்ற நிலை மாறி தற்போது புலிகளே மக்கள் - மக்களே புலிகள் என பரிணாமம் பெற்றுள்ளோம். அரசியல் போராட்டத்தை நடத்தி எங்களது உரிமைகளை வென்று எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

கட்சி பேதங்கள் அமைப்புகளிடம் உள்ள வேறுபாடுகளை கடந்து தமிழீழ தேசத்தை வென்று எடுப்பதற்கு தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க ஒற்றுமையுடன் இணைந்து செய்பட வேண்டும். இதற்கு அனைத்து அமைப்புகளும், மக்களும், புலம் பெயர் மக்களுக்கும் கடமைகள் உண்டு. அரசியல் உரிமைகளை பெற ஒரே நேர் கோட்டில் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் எல்லோரும் இருக்கின்றோம். புலம் பெயர் மக்கள் உதவி புரிந்தால் எமது தேசம் அன்னியர்களிடம் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படாது என்று வீடியோவில் அவர் தெரிவித்து உள்ளார்.

எமது மக்களுக்கு உதவி புரிந்த இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள மக்களுக்கு, தமிழக மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன், மேலும் எங்களுக்காக குரல் கொடுப்பீர்கள் எனவும் நம்புகிறேன். அரசியல் போராட்டம் மிகவும் கடினம் இதற்கு பெறுமை நம்பிக்கை இதனை புரிந்து கொண்டு உள்ளேன். தனி தேசமே நமது உரிமையை மீட்டு தர முடியும். தமிழீழம் தனி தேசமாக உருவாகும் என நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

சிங்கள மக்கள் எங்கள் எதிரிகள் இல்லை. சிங்கள மக்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டதும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசியல்வாதிகளால் பெய்யான கருத்துக்கள் விதைக்கப்பட்டு சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக தூண்டிவிடப்பட்டுள்ளார்கள். எனவே, எனது போராட்டத்தை நீங்கள் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன்" என பிரபாகரன் மகள் துவாரகா பிரபாகரன் எனக் கூறி பெண் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சாதி வாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் - மீண்டும் உறுதிப்படக் கூறிய ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.