ETV Bharat / state

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி நீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும்..! மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 5:57 PM IST

Cauvery water issue: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதில் மட்டும்தான் குறியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு கிடைக்கும் நீர் மேலும் பாதிக்கபடும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

Vaiko urged the central government to ensure the release of water as per the Cauvery Management Authority order
மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின் படி காவிரியில் நீர் திறப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையக் குழுக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

அதில், தமிழக அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, ‘‘உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழகத்துக்கு அக்டோபரில் 140.099 டிஎம்சி நீரைக் கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால், நடப்பாண்டில் இதுவரை 56.394 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளது. 83.705 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. மேட்டூர் அணையில் 18 டிஎம்சிக்கும் குறைவான அளவில் நீர் இருப்பு உள்ளது. தமிழக விவசாயிகளின் நெற்பயிர்களைக் காப்பாற்றுவதற்கு விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தினார்.

அதற்குக் கர்நாடக அரசின் தரப்பில், ‘‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் குறைந்த அளவில்தான் நீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. எனவே தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது. தற்போது அணையில் இருக்கும் நீரைக் கொண்டே குடிநீர் மற்றும் விவசாய தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

மேகதாதுவில் அணைக் கட்டினால் மழைக்காலங்களில் அதிகளவில் நீரைத் தேக்க முடியும். வீணாகக் கடலில் காவிரி நீர் கலப்பதைத் தடுக்க முடியும். எனவே, மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதிக்கவேண்டும்'' என வலியுறுத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னைக்கு, மேகதாது அணை திட்டத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் விவரிப்போம்” என்று கூறி இருந்தார்.

இதே கருத்தை மீண்டும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகம் முன் வைத்து இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு முனைப்புக் காட்டி வருவது கண்டனத்திற்குரியது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு நீர் வரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும்.

வறட்சிக் காலங்களில் நீர் பங்கீடு குறித்து காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் தெளிவான உத்தரவை அளித்துள்ளது. அதன் அடிப்படையில்தான் காவிரி மேலாண்மை ஆணையம்,‘‘தமிழகத்தின் விவசாய தேவைக்காகக் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளிலிருந்து நவம்பர் 23-ம் தேதிவரை விநாடிக்கு 2,600 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும்.

அதாவது பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 2,600 கன அடி நீர் தமிழகத்துக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக மாநிலம் காவிரியில் நீர் திறப்பதை மத்திய அரசின் நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும்” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "400 இடங்களுக்கு மேல் வென்று மீண்டும் மோடி பிரதமராவார்" - அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.