ETV Bharat / state

"மெனோபாஸ் கொள்கை இதுவரை வகுக்கப்படவில்லை" - எம்பி ரவிகுமார் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 9:59 AM IST

Smiriti Irani: கடந்த 4ஆம் தேதி தொடங்கப்பட்ட நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் மெனோபாஸ் குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

எம்பி ரவிகுமார் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வ பதில்
எம்பி ரவிகுமார் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வ பதில்

சென்னை: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கி, வருகின்ற 22ஆம் தேதி வரையில் 15 அமர்வுகளாக நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து முதல்நாள் கூட்டத்தில் இருந்து உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னதாக நடைபெற்ற கூட்டத்தொடரில் மெனோபாஸ் கொள்கை குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பினார்.

எம்.பி.ரவிகுமார் எழுப்பிய கேள்விகள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய்க் கொள்கையை அறிமுகப்படுத்த அமைச்சகம் பரிசீலித்து வருகிறதா? மாதவிடாய்க் கொள்கை அறிமுகப்படுத்த அமைச்சகம் பரிசீலிக்க முடிவுசெய்யப்பட்டால், அதன் விவரங்கள்?

அத்தகைய கொள்கையை அடுத்த ஆண்டுக்குள் வெளியிட அமைச்சகத்தின் திட்டம் என்ன? அப்படி திட்டம் ஏதேனும் இருந்தால் அதன் விவரங்கள் அல்லது அவை எப்போது அறிமுகப்படுத்தப்படும்? மெனோபாஸ் போன்ற பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?" போன்ற பல்வேறு கேள்விகளை அடுக்கினார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் எழுத்துப்பூர்வ பதில்கள்: நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்றைய முன்தினம் (டிச.8) எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், "மெனோபாஸ் (மாதவிடாய் நிறுத்தம்) என்பது பொதுவாக பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் ஏற்படும் முதுமையோடு கூடிய இயல்பான விளைவாகும்.

எம்பி ரவிகுமார் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வ பதில்
எம்பி ரவிகுமார் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வ பதில்

எந்த அடிப்படை காரணமும் இல்லாமல் ஒரு வருடத்திற்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால், பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் நின்றதாகக் கருதப்படுகிறது. சில பெண்களுக்கு லேசான பிரச்னைகள் ஏற்படும் அல்லது சிலருக்கு எதுவும் இருக்காது. ஆனால் சில பெண்களுக்கு இந்த காலகட்டத்தில் கடுமையான அறிகுறிகள் இருக்கும்.

மாதவிடாய் நின்ற பிற்பகுதியில், மேலும் பல ஆண்டுகளைக் கழிக்கும் பெண்களின் வாழ்வில் இது தவிர்க்க முடியாத நிகழ்வாகும். தேசிய சுகாதாரத் திட்டம் (NHM) மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய மலிவான, தரமான சுகாதார சேவைகளை அனைவருக்கும் வழங்க எண்ணுகிறது.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மெனோபாஸ் கொள்கை என எதுவும் இதுவரை வகுக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நிறுத்தக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக முடிவு செய்வதற்கு முன், அது தொடர்பான அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசிக்கப்படும். இந்த விஷயத்தின் அனைத்து அம்சங்களையும் கவனமாக பரிசீலித்து, மாதவிடாய் நிறுத்தத்தின் விளைவாக பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன அழுத்தம் தொடர்பாக உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் தேவைப்படுகின்றன.

மேலும், மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் மற்றும் பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்னைகள் குறித்த தெளிவை உண்டாக்க வேண்டிய தேவை உள்ளது. இந்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமாகவும் விளம்பரங்கள், வீதி நாடகம் போன்றவற்றின் மூலமாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என விளக்கமளித்தார்.

பிசிறு மாறாத மத்திய அமைச்சரின் பதில்கள்: மத்திய அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதில்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பேசியதாவது, "2019ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி அன்று முதன் முதலாக இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துப் பேசினேன். இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்னை குறித்து இம்முறை மீண்டும் கேள்வி எழுப்பினேன். அப்போது ன்ன பதிலைக் கொடுத்தார்களோ, அதே பதிலை ஒரு வார்த்தைகூட பிசிறு மாறாமல் இப்போதும் கொடுத்திருக்கிறார்கள்" என விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: "ஊழல், சனாதன தர்ம வெறுப்பே இந்தியா கூட்டணி கட்சிகளிடையே உள்ள ஒற்றுமை" - அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.