ETV Bharat / state

சொகுசு காரில் சென்று திருட்டு.. ஆடு, மாடுகள் தான் டார்கெட்.. பலே திருடர்கள் சிக்கியது எப்படி?

author img

By

Published : Aug 9, 2023, 7:44 AM IST

சென்னையில் சொகுசு காரில் சென்று திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வந்த இருவரை சினிமா பாணியில் துரத்திச் சென்ற போலீசார் கைது செய்துள்ளனர்.

காரில் வந்து திருடும் சொகுசுக் கொள்ளையர்கள் கைது
காரில் வந்து திருடும் சொகுசுக் கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னையில் உள்ள ஏழு கிணறு கொண்டித்தோப்பு பகுதியில் வசிப்பவர் பகீரத் (33). இவர் ஷியாம் கார்கோ என்ற நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி டாடா ஏஸ்(TATA ACE) நான்கு சக்கர வாகனத்தை பகீரத் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் 26ம் தேதி மதியம் வாகனத்தை எடுக்க சென்ற போது டாடா ஏஸ் வாகனம் காணாமல் போயுள்ளது.

இது தொடர்பான புகாரில் ஏழு கிணறு போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். குறிப்பாக திருடப்பட்ட வாகனம் சென்ற ஏழு கிணறு முதல் மீனம்பாக்கம் வரை சுமார் 20 கி.மீ இல் உள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் டாடா ஏஸ் சென்ற இடம் தெரியாமல் போனதால், கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை விசாரணை நடத்திய போது கடத்தப்பட்ட ஆட்டோவை பின் தொடர்ந்து ஒரு கார் வருவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த காரில் தெரிந்த மூன்று எண்ணை மட்டுமே வைத்துக்கொண்டு சுமார் 350 கார்களை தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்திய போது, அந்த கார் நீலாங்கரையில் உள்ள டிராவல்ஸுக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அந்த டிராவல்ஸ் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளவே, கோகுல் என்பவர் காரை வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது.

வாடகைக்கு காரை எடுத்த நபரின் அடையாளங்களை எப்.ஆர்.எஸ் கேமரா மூலம் சோதனை செய்த போது செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காரில் பொருத்தபட்டிருந்த ஜி.பி.எஸ்ஸை வைத்து நீலாங்கரை அருகே பதுக்கி இருந்த அந்த குற்றவாளிகளை துரத்தி உள்ளனர்.

போலீசார் வருவதைக் கண்ட திருடர்கள் காரில் வேகமாக தப்பித்து சென்ற போது சுமார் 5 கி.மீ வேகத்தில் சென்ற போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று காரை மோதி குற்றவாளிகளை மடக்கி உள்ளனர். அதைத் தொடர்ந்து, காரில் இருந்த இருவரை பிடித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. குற்ற செயலில் ஈடுபட்ட அந்த இருவரும் மீனம்பாக்கம் கண்ணன் காலனி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்கள் ஸ்டாலின் மற்றும் கோகுல்.

இவர்கள் நீலாங்கரையில் உள்ள டிராவல்ஸ் ஒன்றில் குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு செல்வதாகவும், சுற்றுலா செல்வதாகவும் கூறி ஆவணங்களை சமர்பித்து காரை வாடகைக்கு எடுக்கின்றனர். அதன் பின்னர் அந்த காரை வைத்துக்கொண்டு அதிகாலை நேரத்தில் சவுகார்ப்பேட்டை, மிண்ட் உள்ளிட்ட இடங்களில் டாடா ஏஸ் வாகனத்தை திருடுகின்றனர்.

திருடிய டாடா ஏஸ் வாகனத்தில் ஆடுகள் மற்றும் மாடுகளை ஏற்றிச்செல்லும் கட்டையை கட்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு, மாடுகளை கடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடத்தியவுடன் ஆதம்பாக்கத்தில் உள்ள கறிக்கடையில் ஆடு, மாடுகளை 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துவிட்டு குதூகலமாக இருந்ததும் தெரியவந்தது.

இதே போல கடந்த ஒரு வாரத்தில் 7 ஆடு, மாடுகளை திருடி விற்பனை செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் செயின் பறிப்பு, ஆட்டோ திருட்டு போன்ற குற்றங்களிலும் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் திருடி விற்கும் ஆடு, மாடுகளை வாங்கும் கறிக்கடைகாரரான ஜாபரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட கோகுல், ஸ்டாலின் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: விதிகளை மீறாமல் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை மூடியதை எதிர்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.