ETV Bharat / state

TNPSC குரூப்-4 தேர்வு முடிவு எப்போது? - ட்விட்டரில் டிரெண்டாகும் #WeWantGroup4Results

author img

By

Published : Mar 8, 2023, 3:14 PM IST

Updated : Mar 8, 2023, 3:30 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வின் முடிவுகள் 7 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில், உடனடியாக முடிவுகளை வெளியிடக்கோரி தேர்வர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

WeWantGroup4Results - ட்விட்டரில் கேள்வி எழுப்பும் தேர்வர்கள்!
WeWantGroup4Results - ட்விட்டரில் கேள்வி எழுப்பும் தேர்வர்கள்!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அரசு சார்ந்த பணிகள் துறை வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7,301 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 2022 ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதினர். இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஆகியும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் ஏற்படும் தாமதத்தால் குரூப் 4 தேர்வை எழுதிய சுமார் 18 லட்சம் தேர்வர்கள் காத்துக் கொண்டு இருக்கும் நிலை உருவாகி உள்ளது. அதேநேரம் இந்த மாதத்தில் (மார்ச் 2023) குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும், தேர்வு 2 தாள்களை கொண்டதால் 36 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இதன் காரணமாக மார்ச் மாதம் தேர்வு முடிவுகளை சரியாக வெளியிடுவோம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இருப்பினும், தேர்வு முடிவுகள் குறித்து இன்னும் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆகவே காத்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள், சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிடும்படி பதிவிட்டு வருகின்றனர்.

இதனை #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கில் தேர்வாணையத்தை டேக் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் டிஎன்பிஎஸ்சி தொடர்பான மீம்ஸ்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட இந்த ஆண்டுக்கான (2023) திட்ட அறிவிப்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் குறித்து நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரியில் இந்த தேர்வுக்கான முடிவு அறிவிக்கப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து 2024 ஜூலை மாதத்தில் கவுன்சிலிங் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காலிப்பணியிடங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பையும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிடவில்லை. மேலும் இதனிடையே அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இதனால், தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிதத்து. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக முனியநாதன் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: TNPSC group 2: குரூப்-2 தேர்வில் குளறுபடி.. மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் வேதனை!

Last Updated :Mar 8, 2023, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.