ETV Bharat / state

திருச்சி மத்திய மண்டலத்தில் 18% ஆகக் குறைந்த கொலை குற்றங்கள் - காவல்துறை தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 11:08 AM IST

Trichy Central Zone IG: திருச்சி மத்திய மண்டலத்தில் 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023ஆம் ஆண்டு கொலைக் குற்றங்கள் 18 சதவீதம் குறைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Trichy Central Zone IG
திருச்சி மத்திய மண்டலத்தில் குற்றங்கள் குறைந்தன

திருச்சி: திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி.கார்த்திகேயன் பதவி ஏற்றதிலிருந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து சட்ட ரீதியாக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், மத்திய மண்டலத்தில் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆகையால், காவல்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கைது செய்து வருகின்றனர்.

குறிப்பாக, பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த‌ நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளும், ஆளிநர்களும் சிறப்பான முறையில் கடந்த 2023ஆம் வருடம் பணியாற்றி, குற்றச் சம்பவங்களை 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளனர்.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் கொலைக்குற்றங்கள் 2023ஆம் ஆண்டில் 18 சதவீதம் குறைவாகவும், ஆதாய கொலை வழக்குகள் 8 சதவீதம் குறைவாகவும், கொடுங்குற்றங்கள் 36 சதவீதம் குறைந்தும், பாலியல் தொடர்பான குற்றங்கள் 38 சதவீதம் குறைந்தும் பதிவாகி உள்ளன. கொலை வழக்குகளை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் கார்த்திகேயன் அறிவுரையின் பேரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களை காவல்துறையினர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து, கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ரவுடிகள் ஈடுபடாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒருபகுதியாக, ரவுடிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, வழக்குகளில் விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் இருந்த ரவுடிகள் மீது நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பெறப்பட்டு, அவை நிறைவேற்றப்பட்டன. 2023ஆம் ஆண்டில் ரவுடிகள் மீது நிலுவையிலிருந்த 168 பிடிவாரண்ட்டுகள் நிறைவேற்றப்பட்டு, அவர்கள் விசாரணைக்கு ஆஜராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும் காவல் நிலையங்களில் பெறப்படும் புகார் மனுக்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, உடனடியாக சட்டப்படி தீர்வு காணப்பட்ட காரணத்தினால், முன் விரோதம் காரணமாக நிகழும் கொலை சம்பவங்கள், குடும்ப பிரச்னை காரணமாக நிகழும் கொலைச் சம்பவங்கள் பெருமளவில் 2023ஆம் ஆண்டு கட்டுப்படுத்தப்பட்டது.

ஆகையால் இனிவரும் காலங்களில் தொடர் கொலை, திருட்டு, வழிபறி, மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிணற்றை காணோம் என்றதைப் போல, ரயில் கம்பார்ட்மென்டேயே காணவில்லை..! ஒடிசாவில் நடந்தது என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.