சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 169 அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் போட்டி தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெறும்போது, அவர்களுக்கு நேர்காணலில் முன்னுரிமை அளிக்கும் வகையில், அதாவது வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதற்கு மாறாக வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது என்ற தகவலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. இதனால், கல்லூரிகளில் ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு முன்பு பல்கலைக்கழகப் பணியிடங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், இப்போது புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்ய தரமான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பாடத்திட்டங்களை ஐ.ஐ.டி., புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் நிபுணர்களால் 3 முதல் 6 மாதத்திற்குள் வடிவமைக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், நிரந்தரப் பணிக்காக நடைபெற உள்ள போட்டித் தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்வு பெறும் போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது எந்தவிதமான முன்னுரிமையும் தரப்படாது என்றும், போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனங்கள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பால் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மேலும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றி வருபவர்கள் ஏற்கெனவே நெட், செட் ஆகிய தேர்வில் ஏதாவது ஒன்றில் தகுதிப் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சேது சமுத்திர திட்டம் தேவை: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!