ETV Bharat / state

தமிழகம் முழுவதும் பேருந்துகள் முழுமையாக இயக்கம்.. ஆய்வுக்குப் பின் அமைச்சர் சிவசங்கர் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 12:05 PM IST

Transport Minister Sivasankar: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பொதுமக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்ய ஏதுவாக உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

  • சென்னை, கோயம்பேடு மாநகர போக்குவரத்து பேருந்து நிறுத்தத்தில், பேருந்து இயக்கம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்த போது.

    அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து இயங்குவதால் பொதுமக்கள் அச்சமின்றி எவ்வித பாதிப்பும் இல்லாமல் அனைத்து பேருந்துகளும் பயணத்தினை மேற்கொள்கின்றனர். pic.twitter.com/ANF5ZrTiqG

    — Sivasankar SS (@sivasankar1ss) January 9, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம்: இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில், போக்குவரத்துக் கழகங்களுடன், ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, நேற்று (ஜன.8) நடைபெற்ற 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இந்த நிலையில், சென்னை மாநகரின் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு, நேற்று மாலையே போராட்டத்தை தொடங்கினர்.

பேருந்துகள் 100 சதவீதம் இயக்கம்: முதல் முதலாக திருவான்மியூா் மாநகரப் பேருந்து பணிமனையில், வேலைநிறுத்த அறிவிப்பு ஒட்டப்பட்டு, பேருந்துகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வழக்கமாக 2 ஆயிரத்து 25 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று (ஜன.9) 2 ஆயிரத்து 98 பேருந்துகள் இயக்கப்பட்டன. எஸ்இடிசி (SETC) பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட்டன.

அமைச்சர் ஆய்வு: வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரத்து 452 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று 8 ஆயிரத்து 787 பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் 92.96 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் மற்றும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு முனையம் கிளாம்பாக்கத்திலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக, முழுமையாக பேருந்துகளை இயக்கிட முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து ஊழியர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்: இன்று காலை 9 மணி நிலவரப்படி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், 3 ஆயிரத்து 129 (96.78%), சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் 63 (100%), இதர போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் 94.27% இயக்கப்பட்டன. எனவே, பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.

பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்று கூறினார். இது குறித்து தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “சென்னை, கோயம்பேடு மாநகரப் போக்குவரத்து பேருந்து நிறுத்தத்தில், பேருந்து இயக்கம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து இயங்குவதால் பொதுமக்கள் அச்சமின்றி எவ்வித பாதிப்பும் இல்லாமல் அனைத்து பேருந்துகளும் பயணத்தினை மேற்கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்; தமிழகத்தில் 92% பேருந்துகள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.