ETV Bharat / state

திருமணமான பெண்ணை மிரட்டி அழைத்து செல்ல பர்தா அணிந்து கத்தியுடன் வந்த நபர் கைது!

author img

By

Published : Feb 15, 2023, 4:13 PM IST

காதலியை மிரட்டி அழைத்து செல்ல பர்தா அணிந்து கத்தியுடன் வந்த நபர் கைது
காதலியை மிரட்டி அழைத்து செல்ல பர்தா அணிந்து கத்தியுடன் வந்த நபர் கைது

காதலர் தினத்தையொட்டி, திருமணமான பெண்ணை மிரட்டி அழைத்துச் செல்ல திட்டம்போட்டு கத்தியுடன் வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை: எம்ஜிஆர் நகர், சூலைபள்ளம் வெங்கட்ராமன் சாலையைச் சேர்ந்தவர், சிவநாயகி (வயது 31). இவருக்கு திருமணம் ஆகி தனது கணவர் சுப்பிரமணியன் உடன் சேர்ந்து வசித்து வருகிறார். சிவநாயகி தனது கணவர் நடத்தி வரும் பேன்சி ஸ்டோரில் கடந்த 13ஆம் தேதி அன்று வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது பர்தா அணிந்து கடைக்கு வந்த ஒருவர், அருகில் இருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தில் எதையோ எழுதி சிவநாயகியிடம் காண்பித்துள்ளார். இதைப் படித்த சிவநாயகி கோபத்தில் அலறியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பர்தாவை அணிந்திருந்தவர், அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓட முயற்சி செய்துள்ளார்.

இதனிடையில் சிவநாயகி தனது கணவர் சுப்பிரமணியனுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கடைக்கு வரவைத்து காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற உதவி ஆய்வாளர் ஹரி என்பவர் பர்தா அணிந்த நபரைப் பிடித்துள்ளார். அப்போது பர்தா அணிந்து வந்தது பெண்ணல்ல; ஆண் என்பது தெரியவந்தது. மேலும் அவர் பட்டாக்கத்தி ஒன்றையும் வைத்திருந்தார்.

இதனையடுத்து போலீசார் அந்த நபரை எம்ஜிஆர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் (38) என்பதும் தெரிய வந்தது. மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மகேந்திரன், சிவநாயகியின் கணவரான சுப்பிரமணியனின் உறவினர் என்பதும், மகேந்திரன் சிவநாயகிக்கு சகோதர உறவு முறை என்பதும் தெரியவந்தது.

மேலும் மகேந்திரன் துணி வியாபாரம் செய்து வருவதால், அடிக்கடி சிவநாயகி தொழில் சம்மந்தமாக மகேந்திரனை சந்திக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் குடும்பத்திற்கு தெரியாமல், சிவநாயகி மகேந்திரனுடன் பழகி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து அறிந்த சிவநாயகியின் கணவர், அவரை கண்டித்ததால், சிவநாயகி மகேந்திரன் உடனான பழக்கத்தை துண்டித்துள்ளார். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு சிவநாயகியைப் பார்ப்பதற்கு திருப்பூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் உறவினர்கள் யாருக்கும் அடையாளம் தெரியாமல் இருக்க பர்தா ஆடையை அணிந்து, மகேந்திரன் சென்னைக்கு வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி சிவநாயகி தன்னை அடையாளம் காண, பேன்சி ஸ்டோர் கடையில் இருந்த நோட்டுப் புத்தகத்தில் தனது பெயரை எழுதிக் காண்பித்துள்ளார். இதனைப் பார்த்ததும் சிவநாயகி பயத்தில், தனது கணவரிடம் சொல்லி விடுவதாகக் கூறி, எச்சரிக்க மகேந்திரன் அங்கிருந்து ஓட்டம்பிடித்துள்ளார்.

அதேபோல், சிவநாயகி தன்னுடன் வர மறுப்புத் தெரிவித்தால், தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை காட்டி, சிவ நாயகியை பயமுறுத்தி தன்னுடன் அழைத்துச்சென்று விடலாம் என்ற எண்ணத்திலும் வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிவ நாயகி, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் அளித்தப்புகாரின் பேரில் திருப்பூரைச் சேர்ந்த மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருடப்போன இடத்தில் களைப்பில் தூங்கிய நபர்.. காலையில் காத்திருந்த அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.