ETV Bharat / state

TNPSC: குரூப்-1, குரூப்-2 மெயின்ஸ் தேர்வு முடிவு எப்போது? - டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

author img

By

Published : Apr 19, 2023, 8:22 AM IST

குரூப்-1, குரூப்-2, குரூப்-2 ஏ முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பல்வேறு துறைக்கான பணியிடங்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அரசு வேலை கனவுடன் பல லட்சம் இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்காகத் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 67 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பதாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வு பணிகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 முக்கிய தேர்வுகளை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். அதன் வெளிப்பாடே கடந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பின் போது 7,300 காலிப்பணியிடங்களுக்கு 23 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். குரூப்-4(TNPSC Group 4) தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

குரூப்-2 தேர்வு பணிகள்

அதற்கு அடுத்ததாகப் பெரும்பாலானோர் காத்திருப்பது குரூப்-2(TNPSC Group 2). குரூப்-2 நேர்முகத் தேர்வு மூலம் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), கூட்டுறவுச் சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளும், குரூப்-2 ஏ மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமைச் செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

குரூப்-1 தேர்வு பணிகள்

குரூப் -1 தேர்வை பொறுத்தவரையில் துணை காவல் கண்காணிப்பாளர், சார் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், உதவி வணிகவரி ஆணையர், உதவி இயக்குநர் (பஞ்சாயத்து), மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆண்டுதோறும் மிக சொற்பமான அளவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த தேர்வை நம்பி படித்து வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு விபரங்கள்
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு விபரங்கள்

டிஎன்பிஎஸ்சி புதிய அப்டேட்

இந்நிலையில், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி நடந்த குரூப்-1(TNPSC Group 1) முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் அதாவது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளது. அதேபோல் குரூப்-7 பி மற்றும் குரூப்-8 தேர்வு முடிவுகளும் இம்மாதமே வெளியிடப்படும் எனவும் 5,446 பணியிடங்களுக்குக் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி நடத்தப்பட்ட குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மை தேர்வு முடிவுகளானது டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: IFS: ஐஎஃப்எஸ் லஞ்ச வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.