ETV Bharat / state

"புத்தாண்டு கொண்டாட்டங்களில் கரோனா கட்டுப்பாடு" அமைச்சர் மா.சு. அறிவுரை!

author img

By

Published : Dec 27, 2022, 1:43 PM IST

Updated : Dec 27, 2022, 3:26 PM IST

புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும், பொதுமக்கள் சுயக்கட்டுப்பாடுடன் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

che
che

சென்னை: பிஎப்.7 உருமாறிய கரோனா வைரஸ் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பரவலை எதிர்கொள்ள மருத்துவத்துறை கட்டமைப்புகளை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அவசர கால ஒத்திகைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசரகால ஒத்திகை இன்று நடத்தப்படுகிறது. கரோனா பாதிப்பு ஏற்படும்போது தேவைப்படும் மருந்துகள் கையிருப்பில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கட்டமைப்புகளுக்கும் துறையின் செயலாளர் மூலம் அறிவுறுத்தல் விடப்படுகிறது. மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்வது தொடர்பான வழிமுறைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவர்கள் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி 24 மணி நேரத்திற்குள் துறையின் தலைமைக்கு அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் மாவட்ட எல்லைகளுக்குள் இருக்கிற தனியார் மருத்துவமனைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான மருத்துவ கட்டமைப்பு குறித்து 2 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில், நேற்று சென்னையில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், மாநிலம் முழுவதும் ஒன்பது பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல இரண்டு சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரக்கூடிய அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு, கடந்த 4 நாட்களில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆர்.டி.பி.சிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், இதுவரை யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட வில்லை.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1.75 லட்சம் படுக்கைகள் கையிருப்பில் உள்ளன. அதில், கரோனா சிகிச்சைக்காக 1.25 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 51,945 சாதாரண படுக்கைகள்- 17,542 ஆக்சிஜன் படுக்கைகள்- 2,722 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் 1,954 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது. ஆறு மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா தொற்று பரவினால் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவர்கள் போதுமான அளவில் உள்ளனர். தேவைப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. இருப்பினும் பொதுமக்களுக்கு சுயக்கட்டுப்பாடுடன் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நிகழ்ச்சியை நடத்துபவர்களும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Nasal Vaccine: நாசல் கரோனா தடுப்பு மருந்துக்கு ரூ. 800 விலை நிர்ணயம்

Last Updated :Dec 27, 2022, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.