ETV Bharat / state

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முன்னுரிமை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 7:24 PM IST

Elementary Education Department: பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் (State Seniority) என்ற நடைமுறையைப் பின்பற்றி பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதேபோல் தொடக்கக்கல்வித்துறையிலும் இனிமேல் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

School education secretary Kumaragurubaran announced State Seniority for Primary Education Teachers
தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முன்னுரிமை

சென்னை: தொடக்கக்கல்வித்துறையில் சார்நிலைப் பணிகளின் சிறப்பு விதிகளில் ஒன்பதாம் விதிகளில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஒர் அலகு என உள்ளதனை மாவட்ட முன்னுரிமை அல்லது மாநில முன்னுரிமை என மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து, உரிய பரிந்துரையினை அரசுக்கு அளிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரை தலைவராகவும், உறுப்பினர்களாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கங்கள் கோரிக்கையை அளித்தன. அதில் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒரே பதவி உயர்வு வாய்ப்பான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை.

ஒவ்வொரு ஒன்றியமும், மாவட்டமும் பதவி உயர்வில் சீரற்ற நிலை காணப்படுகிறது. ஒரு சில ஒன்றியங்களில் பதவி உயர்வும், ஒரு சில மாவட்டங்களில் 19 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாத நிலையும் ஏற்படுகிறது. ஒரு ஒன்றியத்திலிருந்து மற்றொரு ஒன்றியத்திற்கு அல்லது மாவட்டத்திற்கு மாறுதலில் செல்லும்போது ஊதியத்தில் எவ்வித இழப்பும் ஏற்படாவிட்டாலும், ஒரு பட்டதாரி ஆசிரியர் தன்னுடைய முன்னுரிமையை இழந்து அடுத்த ஒன்றியத்திற்கோ, மாவட்டத்திற்கோச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் மாநில அளவில் முன்னுரிமை கடைபிடிக்கப்படுகிறது. தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கோ, மாவட்டத்திற்கோச் செல்ல இயலாத நிலை உள்ளது.

இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், பிறகு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்ற முறையிலும், நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர் என்ற முறையில் மாநில முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாளை அடிப்படையாகக் கொண்டு, முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

மேலும், தொடக்கக்கல்வி நிர்வாகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) இது நாள் வரை ஒன்றிய அளவில் கடைபிடிக்கப்பட்டது. இதனால் பதவி உயர்வு, அந்த ஒன்றிய அளவில் மட்டுமே வழங்கக்கூடிய நிலையில் இருந்தது. இதனால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை (State Seniority) உள்ளது போலவே, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், “தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவிலான பணி விதிமுறைகள் 2023 டிசம்பர் 31ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படும்.

அதன்படி, ஒன்றிய அளவில் பணியாற்றும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இனிமேல் மாநில அளவிலான முன்னுரிமை பின்பற்றப்படும் எனவும், பணி நியமனம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் செய்யவும் மாநில அளவில் முன்னுரிமை பின்பற்றப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோட்டையை முற்றுகையிட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.