பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு முழு ஊரடங்கை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த அரிசி பெறும் 21.83 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 218 கோடியே 35 லட்சம் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கம் அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்குவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
இப்பணியை துறை அலுவலர்கள், ஊழியர்கள் எவ்வித தொய்வுமின்றி வழங்குமாறும் இப்பணியில் ஈடுபடும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு, ஒருமுறை ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர்களுக்கு 2500 ரூபாயும் கட்டுநர்களுக்கு 2000 ரூபாயும் வழங்க அனுமதித்து அரசு ஆணையிட்டுள்ளது.
பொது முடக்கத்தால் போக்குவரத்து வசதி இல்லாத நேரங்களில் அத்தியாவசியப் பொருள்களின் விநியோக சேவை பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், பொது விநியோகத்திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தினசரி போக்குவரத்து செலவினமாக ரூ. 200 வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு சம்பள விகித மாற்றம் செய்து உயர்த்தி வழங்கப்பட்டு சங்கங்களில் பணிபுரியும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
கரோனா காலத்தில் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள அனைத்து பொது விநியோகத் திட்டப் பணியாளர்களுக்கும், போதிய முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று காலத்தில், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகையில், தொற்றின் காரணமாக பாதிக்கப்படும் பொது விநியோகத் திட்ட பணியாளர்களுக்கு அரசின் நிதியுதவிகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கு இலவசமாக அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மாநிலத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.