ETV Bharat / state

எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்; சபாநாயகர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 11:55 AM IST

Updated : Nov 10, 2023, 12:19 PM IST

Speaker Appavu: சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சட்டமன்ற செயலாளர், சபாநாயகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 66 அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. 2021ஆம் ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், எதிர்கட்சித் தலைவராக தானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்ந்தெடுக்கபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிர்கட்சி கொறடாவாகவும், எஸ்.ரவி துணை கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்ற கட்சியின் செயலாளராக அன்பழகன் மற்றும் துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனையடுத்து, 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் நீக்கப்பட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு ஜூலை 17-இல் கட்சியின் எதிர்கட்சித் துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும், துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நியமித்துள்ளதாக சபாநாயருக்கு கடிதம் அனுப்பியும், ஐந்து முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியதாகவும், அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகரிடம் முறையிட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களுடன் இருப்பதால், எதிர்கட்சியினர் விவாதங்களில் தலையிடுவதால், கட்சியினரால் திறமையாக கட்சியில் செயல்பட முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அங்கீகரிக்கும்படி, சபாநாயகருக்கும், சட்டமன்றச் செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும், இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களுக்கு உரிய இருக்கை ஒதுக்கி அங்கீகரிக்கக் கோரி 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டார்.

இதையடுத்து, மனுவுக்கு சட்டமன்றச் செயலாளர், சபாநாயகர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம்; சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனுத் தாக்கல்!

Last Updated : Nov 10, 2023, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.