ETV Bharat / state

ஆசிரியர் பணி நியமன வயது வரம்பு உயர்வு: தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் சங்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 7:59 PM IST

Tamilnadu Asiriyar Munnetra Sangam: ஆசிரியர் பணி நியமனங்களுக்கான வயது வரம்பை உயர்த்தியதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு உயர்வு
ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு உயர்வு

ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு உயர்வு

சென்னை: ஆசிரியர் பணி நியமனங்களுக்கான வயது வரம்பை உயர்த்தி உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துரித நடவடிக்கை மேற்கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான வயது வரம்பை உயர்த்தி, தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பள்ளிக்கல்வித் துறையின் கீழுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு, தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள, அனைத்து வகையான ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு விதிகள், முறையே விதி எண்.6(a), விதி எண்.5 மற்றும் விதி எண்.6இல் தெரிவிக்கப்பட்டுள்ள, உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது, “ஆசிரியர் பணி நியமனங்களுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் ஆசிரியர்கள் பணிக்கு, ஓய்வு பெறும் வரையில் பணியில் சேரலாம் என இருந்தது. ஆனால் கடந்த காலங்களில் அதிமுக அரசு வயது வரம்பைப் பொதுப்பிரிவினருக்கு 40 வயது எனவும், இதரப் பிரிவினருக்கு 45 வயது எனவும் தன்னிச்சையாக அறிவித்தது.

இதனால் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் கலங்கிப் போய் நின்றனர். பழைய முறைப்படி வயது வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறி, போராட்டங்களை நடத்தினர். திமுக ஆட்சி அமைந்த பின்னரும், அதே நிலை நீடிப்பது சரியில்லை என்பதைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறினோம்.

இதனிடையே, மீண்டும் போராட்டம் நடைபெறும் போது, மீண்டும் பழைய நிலையைக் கொண்டு வர வேண்டும் எனக் கூறினோம். அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பை உயர்த்தி அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "கெளதமி பாஜகவில் இருந்ததால் புகார் எடுக்கவில்லை.. விலகியதும் எடுத்துக் கொண்டார்கள்" - வானதி ஸ்ரீனிவாசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.