சென்னை அருகே உள்ள நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் வெப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சில மாதங்களுக்கு முன் முகப்பேரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, பார்த்திபன் மற்றும் யுவராஜ் ஆகிய மூன்று பேர் தனக்கு அறிமுகமானதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் போலியான ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூறி அதில் தன்னை பங்குதாரராக இணைத்துக் கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்கள்.
இதையடுத்து, தனது பெயரிலும், தனது குடும்பத்தார் பெயரிலும் முதலீடாக ஒன்பது லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். மேலும் அவர்களை விரைந்து பிடித்து பணத்தை மீட்டுத்தரும்படி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த தண்டபாணி கூறுகையில், தான் மட்டுமல்லாமல் ஏராளமானவர்களிடம் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட மூவரும் கோடிக்கணக்கில் பணமோசடி செய்துள்ளதாகவும், இவர்களை விரைந்து பிடித்து தன்னை போன்ற பலர் இழந்த பணத்தை மீட்டுத்தரும்படியும் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்.