ETV Bharat / state

அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி.. சென்னையில் தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 7:08 PM IST

Teachers hunger strike: பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

Intermediate teachers on hunger strike protest will continue till chief minister stalin fulfill their demand
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராபர்ட்

சென்னை: செப்டம்பர் 28-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் துவங்கிய உண்ணாவிரத போராட்டம் 5-வது நாளாக நடந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை நிறைவு செய்யும் விதமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பசுமை வழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்படி, ஒவ்வொரு சங்கங்களின் பிரதிநிதிகள் தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி மூன்று ஆசிரியர் சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. அதன் காரணமாக மூன்று ஆசிரியர் சங்கத்தினரும் தங்களது தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர போவதாக அறிவித்தனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராபர்ட், "தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்ற கோரி தான் தற்போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எங்களது போராட்டத்தில் கலந்துகொண்டு, உங்களது வாக்குறுதிகள் திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்து முப்பது மாதங்களாகியும் எங்களது பிரச்சனைக்கு தீர்வு இயற்றப்படவில்லை. அதனால் தான் தற்போது இந்த போராட்டம். மூன்றாம் கட்டமாக நடந்த இந்த பேச்சுவார்த்தை சற்று முன்னேற்றத்துடன் நிறைவடைந்து உள்ளது. எங்களது கோரிக்கைகள் முதலமைச்சர் இடம் எடுத்துச் செல்லப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் இன்று இரவே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்பை வெளியிட்டால் எங்களது போராட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு நாளை எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

1.6.2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 1.6.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும் அதன்பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 என்றும் ஒரே பணி, ஒரே கல்வி தகுதி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311 ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு” “சம ஊதியம்” வழங்கப்படும் என கோரிக்கையை இடம் பெற செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதிய அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டு முடிவடைந்த நிலையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தமிழக முதலமைச்சர் 1.1.2023 இந்த புத்தாண்டில் முதல் அறிவிப்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்போது கல்வித் துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணிநியமனம் பெற்று 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்குள் நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களையக்கோரி பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு நிரந்தரமாக மூட வேண்டும்" - புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.