ETV Bharat / state

இரும்பு ஸ்கேலால் அடித்த அரசுப்பள்ளி ஆசிரியை: மாணவனுக்கு கண்ணில் பாதிப்பு!

author img

By

Published : Mar 3, 2020, 8:01 AM IST

சென்னை : அரசுப்பள்ளி ஆசிரியை இரும்பு ஸ்கேலால் அடித்ததில், மாணவனுக்கு கண், மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி பெற்றோர் புகாரளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவன்
பாதிக்கப்பட்ட மாணவன்

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்துவரும் வேலு-ரேகா தம்பதியினரின் மகன் கார்த்திக். இவர் மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், கார்த்திக் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் தனக்கு தலை வலிப்பதாகக் கூறி பள்ளிக்குச் செல்ல மறுத்துவந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவன்

இது தொடர்பாக, கார்த்திக்கின் நண்பர்களிடம் பெற்றோர் விசாரித்தபோது, உமா என்ற தமிழ் ஆசிரியை கார்த்திக்கை இரும்பு ஸ்கேலால் தலையில் பலமுறை அடித்தது தெரியவந்துள்ளது. இதனிடையே, மாணவன் கார்த்திக்கின் இடது கண்ணில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் கசியத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக்கை அவனது பெற்றோர் எழும்பூர் கண் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இதையடுத்து, மாணவனை மீண்டும் சோதித்த மருத்துவர்கள் கண் மட்டுமில்லாமல், மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். தற்போது, மருத்துவர்களின் அறிவுரையின்பேரில் மாணவனின் பெற்றோர் உயர் சிகிச்சைக்காக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், ஆசிரியை மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, மாணவன் கார்த்திக்கின் தாயார் ரேகா, தமிழ் ஆசிரியை தாக்கியதாலேயே, தனது மகனுக்கு கண், மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாணவனுக்கு இந்தளவு பாதிப்பு ஏற்பட்டும் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

மேலும், தனது மகனை இந்த அளவுக்கு கொடூரமாகத் தாக்கிய தமிழ் ஆசிரியை உமா மீது பள்ளி நிர்வாகமும், காவல் துறையும் தகுந்த நடவடிக்கை எடுத்து பிற மாணவர்களின் எதிர்காலமாவது பாதிக்காத வண்ணம் காக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

இதையும் படிங்க: இரு சக்கர வாகனத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.