ETV Bharat / state

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் சட்ட பரிசீலனையில் உள்ளது: ஆளுநர் மாளிகை விளக்கம்!

author img

By

Published : Jul 6, 2023, 4:49 PM IST

Updated : Jul 6, 2023, 5:18 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர்வதற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்தவிதமான கோரிக்கையும் வரவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தார். அதில், ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிட இசைவு ஆணைக்காக (Sanction) அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டு, விரைவான நடவடிக்கையை ஆளுநர் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

குறிப்பாக, முன்னாள் அதிமுக அமைச்சர்களான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா மற்றும் மாவா விநியோகிப்பாளர்களிடம் இருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியது.

மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12. 9.2022 அன்று அனுப்பியது. ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

இதேப்போன்று, மேலும் இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முன்னாள் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12. 9.2022 மற்றும் 15. 5.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முந்தைய அதிமுக அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை ஆளுநர் வழங்கவில்லை என அதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநில அரசின் சட்ட அமைச்சர் கடந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம் எழுதியதாக செய்திகள் வந்துள்ளன. அதன்படி தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் எழுதிய கடித்ததில், பி.வி.ரமணா என்கின்ற பி.வெங்கட் ரமணா, டாக்டர்.சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்கில் நடவடிக்கை எடுப்பதற்கான கடிதம் ராஜ்பவனில் நிலுவையில் உள்ளன என கூறப்பட்டுள்ளது.

மேலும், பி.வி.ரமணா என்கின்ற பா.வெங்கட் ரமணா மற்றும் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்து வந்தது. இவை சட்ட பரிசீலனையில் உள்ளன. அதேபோல் கே.சி.வீரமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் வழக்கு தொடர்பாக மாநில அரசு முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை சரியான ஆணவங்களை சமர்பிக்கவில்லை. எனவே மேலதிக நடவடிக்கைக்கான விசாரணை அறிக்கையை முறையாக சமர்பிக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ராஜ்பவனுக்கு எந்த குறிப்பும் அல்லது கோரிக்கையும் மாநில அரசிடம் இருந்து வரவில்லை" எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: O.P.Ravindranath: தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Last Updated :Jul 6, 2023, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.