ETV Bharat / state

மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஒற்றுமை குறைந்து வருகிறது: ஆளுநர் ரவி

author img

By

Published : May 12, 2023, 4:29 PM IST

Updated : May 12, 2023, 4:38 PM IST

சென்னை ஆளுநர் மாளிகையில் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் மத்திய உயர் கல்வி அமைச்சகத் திட்டத்தின் ஒரு பகுதியாக பீகார் மாநில மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ரவி கலந்துரையாடினார்.

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் மத்திய உயர் கல்வி அமைச்சகத் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஆளுநர் ரவி கலந்துரையாடினார்.
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் மத்திய உயர் கல்வி அமைச்சகத் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஆளுநர் ரவி கலந்துரையாடினார்.

சென்னை: மொழியின் அடிப்படையில் தமிழ், கர்நாடகம், கேரளம், எனப் பிரிக்கப்பட்டு ஒற்றுமை குறைந்து வருகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் மத்திய உயர் கல்வி அமைச்சகத் திட்டத்தின் ஒரு பகுதியாக பீகார் மாநில மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆளுநர் தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மொழி எனக் குறிப்பிட்டார்.

மேலும் தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது எனவும்; தமிழ் மொழி சமஸ்கிருத மொழியை விடப் பழமையானது என்கிற கருத்து உள்ளது எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ''இந்தியாவை எந்த மன்னரும் உருவாக்கவில்லை. இந்தியாவில் கலாசார ஒற்றுமை என்பது 1947-ல் எழுதப்படவில்லை. அது 7000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. பக்தி இயக்கம் இந்த திராவிட மண்ணில் இருந்துதான் தொடங்கியது.

அதற்கு முக்கியப்பங்கு வகித்தவர் ராமானுஜம். அவரிடம் இருந்துதான் துளசிதாசர் பக்தி இயக்கத்தை நாடு முழுவதும் பரப்பினார். பல்லவ மன்னன் பீகார் மாநிலத்தின் நாலந்தாவில் பயின்றுதான் போதி தர்மன் ஆனார். அதன் பின்னர் அவர் சீனா சென்று புத்த மதத்தைத் தழுவினார்'' எனத் தெரிவித்த ஆளுநர், ''மொழியின் அடிப்படையில் தமிழ், கர்நாடகம், கேரளம் எனப் பிரிக்கப்பட்டு ஒற்றுமை குறைந்து வருகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எந்த இடம் உங்களுக்குப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, ''தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் மக்கள் மிகவும் அன்பாகப் பழகுவார்கள். இங்கு இருக்கும் உணவு இட்லி, தோசை மிகவும் நன்றாக இருக்கும்'' என்றார். மேலும் ஒரு கேள்விக்கு "எனது வழிகாட்டி சுவாமி விவேகானந்தர் தான்" எனக் குறிப்பிட்டார்.

''காலம் காலமாக நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் நமது கலாசாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை அடியோடு சிதைத்தனர். அதற்கு முன்னர் இந்தியா தான் உலகின் பணக்கார நாடாக இருந்தது. நான் எனது சிறுவயதில் சரியான சாலை வசதி இல்லாத காலத்தில் 8 கிலோமீட்டர் நடந்து பள்ளிக்குச் சென்றேன். நான் பதவிக்கு விரும்பி மகிழ்ச்சியாக வரவில்லை. இது ஒரு கடமையாக கருதி மக்களுக்கு சேவை செய்ய வந்துளேன்'' எனத் தெரிவித்தார்.

"எனது திருமணம் குழந்தைத் திருமணம். எனது மனைவி கல்லூரி சென்றது இல்லை. ஆனால், அவர் எனது வாழ்வின் ஒரு தூண் போல இருக்கிறார். மாநில மக்களுக்கு எது நல்லதோ அதையே மாநிலத்தின் முதல் குடிமகனாக செய்வேன்" என ஆளுநர் ரவி தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவையாகப் பதிலளித்தார்.

’’இந்தியாவில் ராஜாக்கள் காலம் முதல் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்தது’’ எனத் தெரிவித்த அவர், ''தமிழ் காசி சங்கம் மற்றும் சவுராஷ்டிரா காசி சங்கம் புத்தகத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசி மற்றும் சவுராஷ்டிராவிற்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து விரிவாக கூறப்பட்டிருக்கும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிறப்பு, இறப்பை வீட்டில் இருந்தே பதிவு செய்யும் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

Last Updated :May 12, 2023, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.