ETV Bharat / state

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 6:47 AM IST

Tamil Nadu Assembly Meeting : காவிரி பிரச்சினை உள்ளிட்ட பரபரப்பான சூழலில் இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடக் கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

Assembly
Assembly

சென்னை : தமிழக சட்டப் பேரவை இன்று (அக். 9) திங்கட்கிழமை கூடுகிறது. காவிரி நீா் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்து விடுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இன்று காலை 10 மணி அளவில் தமிழக சட்டப் பேரவை கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், முன்னாள் உறுப்பினா்கள் இ.ஏ.லியாவுதீன் சேட், கே.பழனியம்மாள், வெ.அ.ஆண்டமுத்து ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. மேலும், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ப.சபாநாயகம், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கும் அவையில் இரங்கல் தீா்மானம் வாசிக்கப்பட உள்ளது.

தொடா்ந்து, கேள்வி பதில் நேரம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, நிகழாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளாா். கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை தாக்கலுக்குப் பிறகு, மிக முக்கியமான அரசினா் தனித் தீா்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளாா்.

தமிழ்நாட்டின் விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, காவிரி நீா் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்து விடுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை பேரவை வலியுறுத்தும் தீா்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளார்.

தொடர்ந்து இந்த தீா்மானத்தின் மீது அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளை சோ்ந்த தலைவா்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளனா். இதன்பிறகு, தீா்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எப்படி இருக்கும், காங்கிரஸ் கட்சி எத்தகைய வாதங்களை முன்வைக்கப் போகிறது என்பது இன்றைய சட்டப் பேரவைக் கூட்டத்தில் உற்றுநோக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இன்றைய கூட்டம் நிறைவடைந்ததும், பேரவைத் தலைவா் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்கள் வரை கூட்டம் இந்த கூட்டத் தொடரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.. போலீஸ் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.