ETV Bharat / state

மறைந்தார் மக்களின் நாயகன் விஜயகாந்த்.. கடந்து வந்த பாதை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 9:39 AM IST

Vijayakanth Death: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 71.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு அரசியலில் தேசிய அரசியல் ஓங்கிக்கொண்டிருந்த சமயத்தில் திராவிட கட்சிகள் வந்து அனைத்தையும் அணைத்து போட்டன. தேசிய கட்சிகளின் வரலாறுக்கு முடிவுரை எழுதி திராவிட கட்சிகள் புதிய வரலாறை எழுதின. அந்த வரலாற்று காலத்தில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்தவர் விஜயராஜ். அந்த விஜயராஜ் விஜயகாந்த் எனும் நடிகராக மாறி கிராமத்து மண்வாசனையை பற்றி பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் கொடி உயர பறந்தபோது நடிகராக எப்படி தைரியமாக உள்ளே நுழைந்து தன்னை நிரூபித்தாரோ அதேபோல் அரசியல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இரண்டு பேரின் கொடி பறந்தபோது உள்ளே நுழைந்தார். அரசியல் களத்துக்குள் நுழைவது எளிது ஆனால் முதல் சட்டப்பேரவை தேர்தலை தனித்து எதிர்க்கொள்வது கடினம். அதனை விஜயகாந்த் செய்தார்.

விருத்தாசலத்தில் 2006 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அவர் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தமிழ்நாடு வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த தேர்தலில் இருந்து விஜயகாந்த் தவிர்க்க முடியாதவராக மாற ஆரம்பித்தார்.2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடை 5 முறை ஆட்சி செய்த கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் தருவாயில் இருக்கிறது என்றார். அதுதான் விஜயகாந்த் தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாதவராக இருந்தார் என்பதற்கு உதாரணம்.

ஆனால் விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கி வென்ற அவர் தன்னுடைய சகாக்களையும் எம்.எல்.ஏக்களாக வெல்ல வைத்து சட்டப்பேரவைக்குள் அழைத்து சென்று தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார். விஜயகாந்த் நெருக்கமாக இருந்த கருணாநிதியோ மூன்றாவது கட்சியின் பிரதிநிதியாக அமர்ந்திருந்தார்.

ஜெவுடன் கூட்டணி வைத்ததால் அவர் என்ன செய்தாலும் விஜயகாந்த் அடிமையாக இருப்பார் என்று பலரும் பேசினர். ஆனால் விஜயகாந்த் செய்தது வேறு. தனக்கும் தன் கட்சி சகாக்களுக்கும் சுயமரியாதை குறைந்ததால் ஜெயலலிதாவை வைத்துக்கொண்டே தனது நாக்கை துருத்தி அரட்டி அமர வைத்தார். அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது. ஏனெனில் ஜெ அதிகாரத்தில் இருக்கும்போது அப்படி செய்தவர் எவரும் இல்லை.

தொடர்ந்து அதிமுகவுடன் பயணித்துக்கொண்டிருந்த அவர் ஒருகட்டத்தில் அங்கிருந்து விலகி மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதில் தோல்வியடைந்தார். அதற்கு பிறகு அரசியலில் அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு உடல்நிலையும் சரியில்லாமல் போக அமெரிக்காவில் சிகிச்சை செய்து திரும்பினார்.

அதற்கு பிறகு எந்த ஆக்டிவ்வான செயலும் செய்யாத அவர் ஓய்வில் இருந்தார். பின்னர் அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து வந்த அவர் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் இருந்து மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்து மீண்ட அவர் டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழுவில் சர்க்கர நாற்காலியில் அமர்ந்தவாரே வந்து கலந்துகொண்டார். அந்த பொதுக்குழுவில் தேமுதிகவின் பொதுச்செயலாளாராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவால் கடந்த செவ்வாய்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(டிச.28) காலை உயிரிழந்ததாக சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எந்த அரசியல் கட்சி தலைவரும் தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்து எதிர்க்கட்சி நாற்காலியை அலங்கரித்தது கிடையாது. அதனை விஜயகாந்த் மட்டும்தான் செய்தார்.

இதையும் படிங்க: “சும்மா பிராங்க் பண்ணேன்” இணையத்தில் வைரலான வீடியோவிற்கு நடிகர் விஷால் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.