ETV Bharat / state

"மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாவிடில் கடும் நடவடிக்கை" - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை!

author img

By

Published : Mar 2, 2023, 2:10 PM IST

மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் வீட்டு அபாயகரமான மருத்துவ கழிவுகளை முறைப்படி அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Strict
Strict

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் இன்று(மார்ச்.2) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து மற்றும் அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016ஐ வகுத்துள்ளது. இவ்விதிகளின் படி, மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து, சுத்திகரிப்பு செய்வதற்காக பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்திடம் ஒப்படைக்க வேண்டும். தொற்று ஏற்படுத்த கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.

இந்த விதிகளின்படி, மருத்துவக் கழிவுகளை முறையாக கையாள்வது தொடர்பாக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இருப்பினும், மருத்துவ கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரைகள், நீர் நிலைகள், மறைவான பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன.

வீடுகள், விடுதிகள், முதியோர் இல்லம் போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படும் காலாவதியான மருந்துகள், உடைந்த பாதரச வெப்பமானிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகள், அசுத்தமான கேஜ் போன்றவை, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, 'வீட்டு அபாயகரமான கழிவுகள்' என வரையறுக்கப்பட்டுள்ளன. இக்கழிவுகளை முறையாக சேமித்து பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்திடம் ஒப்படைக்க வேண்டும். இக்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஆபத்தானவையாகும். இவை மற்ற கழிவுகளுடன் நேரடியாக சேர்வதன் மூலம் வேதியல் மாற்றங்கள் தூண்டப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும்.

உள்ளாட்சி அமைப்புகள், வீடுகள், விடுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மருத்துவ மற்றும் திடக் கழிவுகளை முறையாக அகற்றப்படாவிட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - விதிகளை மீறி அலட்சியமாக கழிவுகளை அகற்றுவோர் மீது உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்திடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும் - மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிர்க்க வேண்டும். இந்த விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.