ETV Bharat / state

'திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது' - ஈபிஎஸ் விமர்சனத்திற்கு CM பதிலடி!

author img

By

Published : Mar 20, 2023, 11:00 PM IST

’திமுக ஆட்சிக்கு வரும்போது 62 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய்ப்பற்றாக்குறையை நடப்பு மதிப்பீடுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைத்துள்ளோம். தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம்’ என எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ' 'திராவிட மாடல்' என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டாக இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டு வெளியாகி உள்ளது. 'திராவிட மாடல் என்றால் என்ன?' என்று கேட்டவர்களுக்கு, “அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்று நான் பதில் அளித்தேன். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று நான் விளக்கி இருந்தேன். இந்த நிதிநிலை அறிக்கை என்பது திராவிட மாடல் கருத்தியலை முழுமையாக உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது.

எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் அதனுடைய முகமாக இருப்பது ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைதான். ஓராண்டு காலத்துக்கான அறிக்கையாக மட்டுமல்லாமல், அடுத்தடுத்து வரக்கூடிய ஆண்டுகளை வழிநடத்தும் அறிக்கையாகவும் அவை அமைந்திருக்கும். அந்த வகையில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான அறிக்கை என்பது, தலைமுறைகளைத் தாண்டி வாழ்வளிக்கும் அறிக்கையாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுக்க வாழ்க்கைக்கு உதவி செய்யப்போகும் பல்வேறு நலத்திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை மாதம்தோறும் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம்.

2011-21 வரை 10 ஆண்டு இருண்ட கால அதிமுக ஆட்சி, தமிழ்நாட்டில் ஏற்படுத்தி வைத்துவிட்டு போன நிர்வாகச் சீர்கேடு மற்றும் நிதிச்சீரழிவுகள் காரணமாக, ஆட்சிப் பொறுப்பேற்றதும் 1000 ரூபாய் உரிமையைத் தொகையை வழங்க இயலவில்லை. தங்களது கையாலாகாத்தனத்தால் தமிழ்நாட்டை மொத்தமாக நாசப்படுத்திவிட்டது, அதிமுக ஆட்சிக்காலம். இதனை உணர்ந்த காரணத்தால், நிர்வாகத்தைச் சரிசெய்து, நிதியையும் சரிசெய்ய திமுக அரசுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வரும்போது 62 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறையை நடப்பு மதிப்பீடுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைத்துள்ளோம். தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.

தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது. வேளாண் உற்பத்தி பெருகி இருக்கிறது. பொதுமக்களின் சமூகப் பங்களிப்பு பெருகி உள்ளது. இதன் மூலமாகத் தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றத்தின் அடையாளமாக நிதியும் ஓரளவு தன்னிறைவு பெரும் சூழலை எட்டி வருகிறது.

இந்த நிலையில் மக்களுக்கு அளித்த மிக முக்கியமான வாக்குறுதியான 1000 ரூபாய் உரிமைத்தொகை என்பதை அறிவித்துள்ளோம். இதற்கு முதல் கட்டமாக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகும் மகத்தான அறிவிப்பாக இது இந்த நிதிநிலை அறிக்கையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதர் நலனை உள்ளடக்கியும் - ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்தும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. நிகழ்காலத்துக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தையும் உள்ளடக்கியதாக இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன. மகளிர், மாணவ - மாணவியர், இளைஞர், ஏழை எளிய விளிம்பு நிலை மக்களைக் கை தூக்கிவிடுவதன் மூலமாக அவர்களை மட்டுமல்ல, அவர்கள் வழியில் வர இருக்கிற தலைமுறையையும் சேர்த்து இந்த நிதிநிலை அறிக்கை வளர்த்தெடுக்க இருக்கிறது. இதனைத்தான் ஒற்றைச் சொல்லாக 'திராவிட மாடல்' என்று நாங்கள் சொல்கிறோம்.

இது ஒரு கட்சியின் அரசல்ல; ஓர் இனத்தின் அரசு! கொள்கையின் அரசு! என்று நாங்கள் சொல்லி வருவதை உறுதிப்படுத்துவதாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கங்களை அறியும் பக்குவம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 'மின்மினிப் பூச்சியைப் போன்றது இந்த அறிக்கை. மின்மினிப் பூச்சியில் இருந்து வெளிச்சம் கிடைக்காது' என்று சொல்லி இருக்கிறார்.

கழக அரசு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது உதயசூரியனைப் போல் அனைவருக்கும் ஒளியூட்டக் கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல. உதயசூரியனின் வெப்பத்தில் மின்மினிப்பூச்சிகள் காணாமல் போய்விடும். இருண்ட காலத்தைத் தமிழ்நாட்டுக்கு வழங்கிய அவரால் உதயசூரிய ஒளியைப் பார்க்க முடியாமல் தவிப்பதையே அவரது பேட்டி உணர்த்துகிறது.

நிதிநிலைமை சீராக இருந்திருக்குமானால் இன்னும் பல்வேறு திட்டங்களைத் தீட்டியிருக்க முடியும் என்பதே எங்களது எண்ணம்! கடந்த அதிமுக ஆட்சியில் இருண்டகால நிதிநிலைமையைச் சீர்செய்தும், முன்னேற்றியும், முற்போக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும், தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கையை உருவாக்கிய நிதி அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜனுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை' - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.