ETV Bharat / state

மழைக் காலத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை.. கோடையில் வறட்சி அடைவது ஏன்?

author img

By

Published : Jul 15, 2023, 8:13 AM IST

தாம்பரத்தில் உள்ள 15 ஏரிகளில் கழிவு நீரும், குப்பைகளும் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், இவற்றை பொதுப்பணித்துறை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் எவ்வாறு நடந்து வருகின்றன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

மழைக் காலத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை.. கோடையில் வறட்சி அடைவது ஏன்?

சென்னை: சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க தென்சென்னையில் உள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட ஏரிகள் அனைத்திலும் கழிவு நீர் கலந்து குட்டையாவதைத் தடுத்து தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையின் புறநகர் பகுதிகளான தென்சென்னையில் இருந்த நீர்நிலைகள்தான் ஒரு காலத்தில் சென்னையின் பொக்கிஷமாக காணப்பட்டன. அதுவே, சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும் இருந்தது. ஆனால், காலப்போக்கில் தென்சென்னையில் உள்ள பெரும்பாலான ஏரிகள் சிறிது சிறிதாக அழிந்து விட்டன.

தற்போதும் எஞ்சியுள்ள ஏரிகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் அதேநிலைதான் தொடர்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வளர்ச்சி மற்றும் அரசின் அஜாக்கிரதையால் சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும் ஏரிகள் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் தேங்கும் இடமாகவும் மாறி அழிந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏரிகளில் ஆக்கிரமிப்பு, நீர் நிலைகள் அனைத்தும் பிளாட்டுகளாக்கப்பட்டு விற்பனையானதால், கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அவற்றின் இழப்பை உணர்த்தும் முன்னுதாரணமாக உள்ளது. அதன் பிறகு, கால்வாய்கள் முறையாக வெட்டப்பட்டு, நீர்நிலை விற்பனை தடுக்கப்பட்டதால் பின்னர் வந்த மழைக்கால வெள்ளப்பெருக்கில் இருந்து சென்னை ஓரளவு மீண்டது.

ஏரிகள் நிறைந்த தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிட்லபாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, நெமிலிச்சேரி ஏரி, வீரராகவன் ஏரி, கடப்பேரி, மாடம்பாக்கம் ஏரி, வேங்கைவாசல் ஏரி, பெரும்பாக்கம் ஏரி, திருப்பனந்தாள் ஏரி, கீழ்கட்டளை ஏரி, சேலையூர் ஏரி உள்ளிட்ட 15 ஏரிகள் உள்ளன.

இதில் பல ஏரிகள் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் பெருக்கத்தால் அழியும் விளிம்பில் உள்ளன. இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கும் இடமாகவும், குப்பைக் கழிவுகள் கொட்டி அசுத்தமாகவும் மாறிய ஏரிகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ழிவுநீரால் காணமல்போன ஏரிகளின் நிலை
ழிவுநீரால் காணமல்போன ஏரிகளின் நிலை

ஏரியைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டுவதால் ஏரிகளின் அளவும் சுருங்கி வருகிறது. இதனால், தென்சென்னை பகுதிகளில் பல ஏரிகள் அழிந்து வருவதாக நீர்நிலை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல், ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, அரசு கவனிக்காவிட்டால் பருவ மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு பெருமளவில் பாதிப்பைத்தான் சந்திக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஏரிகள் ஆக்கிரமிப்பு; கிடப்பில் நீதிமன்ற உத்தரவு: இது குறித்து பேசிய சமூக ஆர்வலர் விஸ்வநாதன் கூறுகையில், 'சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பல ஏரிகள் கழிவுநீர் குட்டையாகின. இதனை அதிகாரிகள் புனரமைத்து தூர்வார வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை என்பது வெற்று காகிதம் ஆகவே உள்ளது. பல்லாவரம் பெரிய ஏரியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு இருப்பதாக ஆர்டிஐயில் (RTI) தகவல் வந்துள்ளது. இதற்கு பொதுப்பணித்துறையும், மாநகராட்சி சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவையும் முறையாக செயல்படுத்தாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், ஏரியை முழுமையாக மீட்டெடுப்பதில் சிக்கல்கள் உள்ளன.

நிறைவுக்கு வராத நடைபாதை அமைக்கும் பணி: சிட்லபாக்கம் ஏரிக்கு (Chitlapakkam lake) ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. குரோம்பேட்டை பகுதியில் உள்ள பச்சை மலையில் இருந்து சிட்லபாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரவேண்டும். ஆனால், அதற்கான வழியை அதிகாரிகள் கொண்டுவர எந்த வேலையும் செய்யவில்லை. அதேபோல், சிட்லபாக்கம் நடைபாதைகளை முழுவதும் போடாமல் பாதி மட்டுமே போட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

ஏரியில் கலக்கும் கழிவுநீர்: தாம்பரம், சிட்லபாக்கம், செம்பாக்கம், பல்லாவரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் செம்பாக்கம் ஏரியில் கலக்கின்றன. சுமார் 7 எம்எல்டி கழிவுநீர் ஏரியில் கலந்து நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. செம்பாக்கம் ஏரியில் கலக்கும் கழிவுநீர் நன்மங்கலம் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலையத்திற்கு செல்கிறது. இதனால், சதுப்பு நிலமும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

சுத்திகரிப்பு நிலையம் வேண்டும்: இதனை தடுப்பதற்கு அதிகாரிகள் கால்வாய்களில் வெளியேறும் கழிவுநீரை ஏரியில் கலக்காமல் இருப்பதற்கு வழிசெய்ய வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும். அதேபோல், சேலையூரில் உள்ள ஏரி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கவோ, புனரமைக்கவோ, தூர்வாரவோ இல்லை அந்த ஏரி மிகப்பெரிய கொள்ளளவை கொண்டதால் தூர்வாரி சீரமைத்தால் அதிகப்படியான தண்ணீரை சேமிக்கலாம்.

பொறுப்பை தனியாரிடம் தாரைவார்க்கும் பொதுப்பணித்துறை: பல்லாவரம் பெரிய ஏரியில் இருபுறமும் அடர்ந்து காணப்படும் சீமை கருவேல மரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும். அதேபோல் ஏரிகளுக்கு வரும் கால்வாய்களை முறைப்படி புனரமைக்க வேண்டும் இல்லை என்றால் மழைக்காலங்களில் வெல்லம் தான் ஏற்படும். ஏரிகளின் கொள்ளளவு அதிகரிக்க அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும். ஆனால், பொதுப்பணித்துறை இதை முறையாக செய்யாமல் தனியாரிடம் ஒப்படைக்கின்றனர்.

ழிவுநீரால் காணமல்போன ஏரிகளின் நிலை
ழிவுநீரால் காணமல்போன ஏரிகளின் நிலை

ஏரிகளில் கழிவுநீரை கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் இல்லை என்றால் ஏரி பாதிப்படையாமல் நிலத்தடி நீரும் சேர்ந்து பாதிப்படைந்து விடும் தமிழ்நாடு அரசு முறையான திட்டங்களை வகுத்து ஏரிகளை பாதுகாத்தால் மட்டுமே வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது' என தெரிவித்தார்.

ஏரி நீருடன் நிலத்தடி நீரும் மாசடைகிறது: இது குறித்து நீர்நிலை ஆர்வலர் தயானந்த் கூறுகையில், 'தாம்பரம் மாநகராட்சியில் அதிகப்படியான நீர் நிலைகள் உள்ளன. இதில், ஒவ்வொரு ஆண்டும் பருவம் வழியில் பெய்யும் மழைநீரை சேமிக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் தாம்பரம் மாநகராட்சியில் ஏரிக்கு செல்லும் கால்வாயில் கழிவுநீரைவிட்டு சாக்கடையாக நிரம்பி வழிவதைப் பார்த்து வருகிறோம். கடப்பேரி, சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் தினந்தோறும் அளவில்லாமல் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், ஏரி நீர் மட்டும் மாசடையாமல் நிலத்தடி நீரையும் சேர்த்து அது மாசடைய செய்கிறது.

இதனால், சிறிய மழைக்கு ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி சாக்கடை நீர்கள் கலந்து தெருக்களில் ஓடுகின்றது. நம் முன்னோர்கள் ஏரியை உருவாக்கியது, மழைநீரை சேமிப்பதற்கு தான். அந்த வழக்கத்தை நாம் தவறியதால் சாக்கடை நீரை நிரப்பி சிறிய மழைக்கும் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகிறோம்.

இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், தங்களிடம் ஏரியை புனரமைக்க நிதி இல்லை என கூறுகின்றனர். தமிழக அரசு நிதிகளை ஒதுக்கி ஏரிகளுக்கு செல்லும் கழிவுநீரை சுரங்கங்கள் அமைத்து சுத்திகரிப்பு செய்ய வேண்டும். ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கையை ஏரிகளில் எடுக்க முடியும். சென்னை புறநகர் பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரை சுத்தமாக சேமித்தால் மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்' என்று அவர் கூறினார்.

சென்னையில் மழைநீர் கழிவுநீராவதை தடுக்க வழியென்ன?: சமூக ஆர்வலர் சந்தானம் கூறுகையில், கோடைக்காலங்களில் பல்லாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பிரச்னைகள் ஏற்படக் காரணம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள் அனைத்தும் வறண்டு காணப்படுவதுதான். சென்னையில் பெய்யும் பருவமழையில் 90% தேக்கி வைக்கக்கூடிய சூழ்நிலை இல்லை; அனைத்தும் கழிவுநீரில் சாக்கடையாக சென்று கடலில் கலக்கிறது.

பொதுப்பணித்துறை நடவடிக்கை தேவை: ஏரிகளை புனரமைக்காமல் புறக்கணிக்கப்பட்டதால், தண்ணீர் பிரச்னை அவ்வப்போது ஏற்படுகிறது. சில ஏரிகளில் அரசு செய்யாத பணியை குடியிருப்பு நல சங்கங்கள் இணைந்து செய்கின்றன. அரசாங்கம் ஏரிகளை பாதுகாக்க முன்வரவே தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை என்றார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசனத்திற்கு உதவாத ஏரிகளை சீரமைக்க மாட்டோம் என்கிறார்கள்.

ஆனால், அவை நீர்நிலை ஆதாரங்களாக திகழ்வதோடு, நிலத்தடி நீரை உயர்த்தவும் இந்த ஏரிகள் பயன்படும். அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தென் சென்னை பகுதியில் ஏராளமான ஏரிகள் அழிந்துள்ளன. தமிழக அரசு தாம்பரம் மாநகராட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதிகளை ஒதுக்கி கழிவுநீர் கலப்பதை தடுத்து ஏரியை சீரமைத்தால் ஏரிகளில் நல்ல தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் வறண்ட காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும்' என்று அவர் விளக்கினார்.

ரூ.25 கோடி நிதி ஒதுக்கியும் ஆமைவேகத்தில் பணி: சமூக ஆர்வலர் சீதாராமன் கூறுகையில், 'தாம்பரம் மாநகராட்சியில் உள்ள சில ஏரிகளுக்கு அரசு நிதி ஒதுக்கியும்; அதில் பணிகள் சரிவர செய்யவில்லை. சிட்லபாக்கம் ஏரிக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு ஆண்டுகளாக பணி நடைபெறுகிறது. விரைவாக பணிகள் நடைபெறவில்லை.

ஏரிகளை ஆக்கிரமிக்கும் கழிவுநீர்களை அகற்றுக: தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சென்னையில் உள்ள 10 ஏரிகளை சீரமைக்க தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள பெரும்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரியும் உள்ளன. ஆனாலும், இன்னும் அதில் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால், மழைக்காலம் வந்துவிட்டால் ஏரியை புனரமைக்கும் பணிகள் முடங்கிவிடும். சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் ஏரிகள் கழிவுநீர் மையமாகத்தான் உள்ளது.

தமிழ்நாட்டிற்கு 'தாம்பரம்' முன்னுதாரணமாவது எப்போது?: தமிழகத்தில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் ஏரிக்கு தான் சென்றடைகின்றன. இதனை தமிழக அரசு தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம்பரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடையாத காரணத்தினால் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையின் நுழைவு வாயிலாக இருக்கும் தாம்பரம் மாநகராட்சியில் இருக்கும் ஏரிகளை சுத்தப்படுத்தி மாநிலத்திற்கு முன் உதாரணமாக காட்ட வேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறியதாவது, 'சென்னை புறநகர் பகுதியில் பொருத்தவரையில் சிட்லபாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஏரி தூர்வாரப்பட்டு பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு சிறந்த நகர்ப்புற ஏரியாக புனரமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஒட்டியம்பாக்கம் பகுதியில் (Ottiyambakkam Lake) சுமார் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மழைக்காலத்தில் வெளிவரும் வெள்ளநீரை முட்டுக்காடு முகத்துவாரத்திற்கு கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும் சில ஏரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை மற்ற ஏரிகளை சீரமைக்க அரசாங்கத்திடம் நிதி கோரியுள்ளோம். அதேபோல், வெள்ளப்பாதிப்புகளை தடுக்க கால்வாய்களை சீரமைத்து தண்ணீர் செல்வதற்கு வழி செய்யவும் அரசிடம் நிதி கோரியுள்ளோம். அதேபோல், ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு மாநகராட்சி சுத்திகரிப்பு நிலையம் அமைத்தவுடன், கழிவுநீர் கலப்பதை தடுக்கப்படும் என்றார். ஏரிகளின் ஆக்கமிப்பை அகற்றுவதற்கு முன்பு நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது. படிப்படியாக தாம்பரம் மாநகராட்சி உள்ள ஏரிகளை சீரமைப்போம்' என்று விளக்கமளித்துள்ளார்.

கழிவுநீர் சுரங்கங்கள்: இது குறித்து நீர் வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏரிகளுக்கு செல்லும் கால்வாயில் கழிவுநீர் சென்று ஏரிகளில் கலப்பதை தடுப்பதற்கு கழிவுநீர் சுரங்கங்களை கட்டி சீரான முறையில் ஏரியில் கலக்காமல் செயல்படுத்த வேண்டும். அதை செயல்படுத்தாவிட்டால் கழிவுநீர் ஏரியில்தான் கலக்கும். இதன் மூலம் ஏரி மாசடைவதோடு மழைக்காலத்தில் நிலத்தடி நீரும் மாசடையும்; வெள்ளப்பெருக்கும் ஏற்படும்' என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Delhi Flood: அபாய கட்டத்தை கடந்த யமுனை - டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.