ETV Bharat / state

திரைப்பட டம்மி ஆயுதங்களை எடுத்துச் செல்வதில் சிக்கல்: நடைமுறைகளை வகுக்கக்கோரி வழக்கு

author img

By

Published : Jan 18, 2022, 6:17 PM IST

திரைப்படப் படப்பிடிப்பிற்குத் தேவையான டம்மி ஆயுதங்களை எந்தவித இடையூறுமின்றி கொண்டு செல்ல ஏதுவான நடைமுறைகளை வகுக்கக் காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி,’தென் இந்திய டம்மி எஃபெக்ட்ஸ் சங்கம்’ உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

திரைப்பட டம்மி ஆயுதங்களை எடுத்து செல்வதில் சிக்கல் : நடைமுறைகளை வகுக்கக் கோரி வழக்கு
திரைப்பட டம்மி ஆயுதங்களை எடுத்து செல்வதில் சிக்கல் : நடைமுறைகளை வகுக்கக் கோரி வழக்கு

சென்னை: நடிகர் சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடியில் நடைபெற்றபோது, படப்பிடிப்புக்குத் தேவையான டம்மி துப்பாக்கிகளை உதவி இயக்குநர் விக்டர் என்பவர் கொண்டு சென்றார்.

அவரிடம் இருந்த டம்மி துப்பாக்கிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள கிடங்கிலிருந்து 150 டம்மி துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, படப்பிடிப்புக்குப் பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்குரிய நடைமுறைகளை வகுக்க காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி ,'தென் இந்திய திரைப்பட டம்மி எஃபெக்ட்ஸ் சங்கம்' உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

டம்மி ஆயுதங்களைக் கொண்டு செல்ல நடைமுறைகளை வகுக்க வேண்டும்:

அந்த மனுவில், 'டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்வதற்குரிய நடைமுறைகளை வகுக்கக்கோரி 2014ஆம் ஆண்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மும்பை காவல் துறையினர், டம்மி ஆயுதங்களுக்கு எண்ணிட்டு, உரிமம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளனர்.

அதேபோல தமிழ்நாட்டில் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவதுடன், எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்' என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல் நசுங்கி சிறுத்தை உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.