ETV Bharat / state

சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தங்கை கைது

author img

By

Published : Mar 20, 2023, 10:57 AM IST

சென்னையில் சொத்துக்காக அண்ணனை, தங்கையே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sister arrested for killing brother by pouring petrol on fire due to property dispute in Chennai
சென்னை சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தங்கை கைது

சென்னை: பெரம்பூர் சபாபதி தெருவை சேர்ந்தவர் முனிரத்தினம் (63). இவருடைய மனைவி அமுலு. முனிரத்தினத்தின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூரில் 6 மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. முனிரத்தினம் அதே பகுதியில் அவரது சொந்த வீட்டில் தரைதளத்தில் வசித்து வருகிறார்.

அவரது வீட்டின் மேல் தளத்தில் அவரது உறவினர் தாமோதரன், மகன் உதயகுமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் முனிரத்தினத்திற்கு உணவு கொடுத்த பின் தாமோதரன் மேல் தளத்தில் உறங்கச் சென்றுள்ளார். இதையடுத்து நள்ளிரவில் கீழ்தளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த முனிரத்தினம் தீ பற்றி எரிந்தநிலையில் அலறியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு மேலிருந்து கீழே வந்த தாமோதரன் உடனடியாக தீயை அணைத்து, பலத்த தீ காயங்களுடன் இருந்த முனிரத்தினத்தை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதையடுத்து முனிரத்தினம் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சொத்து பிரச்சனை காரணமாக முனிரத்தினத்தின் தங்கை தனலட்சுமி என்பவர் முனிரத்தினம் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது பெட்ரோல் தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி முனிரத்தினத்திடம் மரண வாக்குமூலம் பெற்று தனலட்சுமியை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் முனி ரத்தினத்திற்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முனிரத்தினம் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அண்ணனை சொத்து பிரச்சனைக்காக பெட்ரோல் ஊத்தி தீ வைத்துக் கொளுத்தி கொன்ற தங்கை தனலட்சுமியை (63) திரு.வி.க நகர் போலீசார் கைது செய்து, விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வயதான காலத்தில் குழந்தைகள் இன்றி, மனநலம் குன்றிய மனைவியை பிரிந்து, ஆதரவற்ற நிலையில் இருந்த அண்ணனை, சொத்துக்காக தங்கையையே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கல்விக் கடன் காப்பீடு பணத்தில் ஆன்லைன் ரம்மி.. ரூ.34 லட்சம் ஊழல் செய்த வங்கி அதிகாரி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.