ETV Bharat / state

விழுப்புரம் ஆசிரம விவகாரம் - 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

author img

By

Published : Apr 13, 2023, 9:00 PM IST

விழுப்புரம் ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம விவகாரம் - 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம விவகாரம் - 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனதாகவும், அங்கு இருந்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜூபின் பேபி மற்றும் அவரது மனைவி மரியா உள்ளிட்ட 7 பேர், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (ஏப்ரல் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்ட காவல் துறை தரப்பு வழக்கறிஞர், “ஆசிரமத்தில் இருந்து 167 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள், அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களிலும், தனியார் காப்பகங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 பேர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் 28 பேர் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஆதரவற்றோர் இல்லம் நடத்தியதன் மூலம் மனுதாரர்களுக்கு என்ன பலன் கிடைத்தது?” என கேள்வி எழுப்பினார். இதற்கு காவல் துறை தரப்பில், பல்வேறு இடங்களில் இருந்தும் நிதி பெறுவதாகவும், உடல் உறுப்பு விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது எனவும், அது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், “அரசிடம் ஒப்புதல் பெற்று, கடந்த 25 ஆண்டுகள் சேவையாக இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார்கள். ஆசிரமத்துக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருந்து, பலர் இந்த ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அனுப்பிய மருந்துகளே, அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வரும் ஆசிரம நிர்வாகிகள் மீதான வழக்கில், இரண்டு மாதங்கள் ஆகியும் புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. வெறும் யூகங்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. எனவே, ஜாமீன் கோரி விண்ணப்பித்த 7 பேரும், சென்னையில் தங்கி இருந்து சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை உடன் ஜாமீன் வழங்கப்படுகிறது” என உத்தரவிட்டார். முன்னதாக கடந்த மார்ச் 14 அன்று, ஆசிரமத்தில் ஜூபின் பேபி தங்கி இருந்த அறை மற்றும் வார்டன் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: விழுப்புரம் ஆசிரம வழக்கில் 7 பேர் ஜாமீன்கோரி மனு தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.