ETV Bharat / state

செந்தில் பாலாஜி வழக்கு: 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வில் நாளை விசாரணை!

author img

By

Published : Jul 5, 2023, 2:22 PM IST

Updated : Jul 5, 2023, 7:05 PM IST

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் நேற்று (ஜூலை 4) நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரதச் சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கினர்.

அப்போது மேகலா தரப்பில், கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக்கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.

மேலும், நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோதப் பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரிக்கான அதிகாரம் அமலாக்கத்துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை எனத் தெரிவித்தார்.

இதனை அடுத்து அமலாக்கப் பிரிவு தரப்பில், நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இல்லை எனவும், நீதிமன்றக் காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ? ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ? வழக்குத் தொடரவில்லை என்பதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல.

மேலும் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் தான் உள்ளாரே தவிர, அமலாக்கத்துறை காவலில் இல்லை என்பதால் அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது. சட்டவிரோதப் பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களைம் கேட்டறிந்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பைத் தெரிவித்தனர். அதன்படி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தீர்ப்பை வழங்கிய நீதிபதி நிஷா பானு, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். அமலாக்கத்துறை சட்ட விதிகளின் படி கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதனால் செந்தில் பாலாஜியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.

நீதிபதி நிஷா பானுவின் உத்தரவை நீதிபதி பரத சக்கரவர்த்தி ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் தீர்ப்பை வழங்கிய நீதிபதி பரத சக்கரவர்த்தி, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை. நீதிமன்றக் காவலில் உள்ளதைக் கருத்தில் கொண்டு சட்ட விரோதக் காவலில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டதாக கருத முடியாது என தெரிவித்து, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்த காலத்தை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக கருத முடியாது. மருத்துவர்கள் அனுமதிக்கும் வரை செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடரலாம் எனவும் உத்தரவிட்டார்.

இதை அடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலாவுக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பாரதச் சக்கரவர்த்தி ஆகிய இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர்.

நீதிபதிகளின் இந்த பரிந்துரையை ஏற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மூன்றாவது நீதிபதியாக விசாரிப்பார் என உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்குத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு, தற்போது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மூன்றாவது நீதிபதியாக விசாரிப்பார் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் மூன்றாவது நீதிபதி வழங்கும் தீர்ப்பே இறுதியானதாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: Uniform Civil Code: "உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்" - புஷ்கர் சிங் தாமி!

Last Updated : Jul 5, 2023, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.